அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை – நாலடியார் 330
நேரிசை வெண்பா
என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு 330
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
ஐயோ, தம்பால் அளவு கடந்த அன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர் பிரித்துக் கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற் பார்த்துக்கொண்டு ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப் பெற்றும் அறத்தை நினையாதவராய்ப் புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணே கழிக்கின்றனர்!
கருத்து:
புல்லறிவானது, செய்திகளை நேரிற் கண்டும் தெளிவு பெறாத இயல்புடையதாய் இருக்கின்றது.
விளக்கம்:
என்னே அன்னோ என்னும்இரங்கல் புல்லறிவினாரின் ஏழைமை கருதிற்று.
மேல் ஆருயிரன்னார் என்பதனால் தமதன்பு பெறப்படுதலின், அளவிறந்த காதல் என்பது தம்பால் அவர் செலுத்தும் அன்பெனக் கொள்ளப்படும்;
எத்துணை அருமையாளரையுங் கூற்றுவன் பிரித்தெடுத்துக் கொள்ள முயலுதலால் மற்று யார் பொருட்டு அறத்தையுங் கருதாது பொருட் பற்றுதலோடு இவ்வாறு சிக்கென்றிருந்து வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளுதலென்று அறிவுறுத்து முகத்தால் இச் செய்யுள் புல்லறிவின் இழிந்த இயல்பை விளக்குவதாயிற்று.
புல்லறிவினார் கழிப்பரென்று எழுவாய் வருவித்துக்கொள்க; ‘உடம்பு பெற்றும் மற்றுக் கொன்னே கழிப்ப' ரென்க.