உறுகண் பலவும் உணராமை கந்தாத் தறுகண்மை யாகாதாம் - பழமொழி நானூறு 220
நேரிசை வெண்பா
உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை யாகாதாம் பேதை - தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
அறிவச்சம் ஆற்றப் பெரிது. 220
- பழமொழி நானூறு
பொருளுரை:
அறிவு இல்லாதவன் வெற்றி புண்ணியம் உண்டாய வழியல்லாது உண்டாகாது என்று நினைத்து அறிவான் வரும் அச்சம் மிகுதியும் உடையவனாதலால், தனக்கு வந்துறும் துன்பங்கள் பலவற்றையும் உணரத்தக்க அறிவின்மையை பற்றுக்கோடாகக் கொண்டுவரும் அஞ்சாமை செய்தொழுகலின் தறுகண்மை உடையவனாக ஆகமாட்டான்.
கருத்து:
வீரர்க்கு அறிவாற்றலும் இன்றியமையாத ஒன்றென்பது இது.
விளக்கம்:
வெற்றியைத் தறுகண் என்றார், அது காரணமாக வருதலின்.
பேதையார் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் புண்ணியம் வேண்டும் என்று நினைத்துக், கடைப்பிடியோடு செயலில் ஊக்கமும் இலராய், அஞ்சி ஆண்மை செய்தொழுகுவர்.
உள்ளச்சம் உடையவராதலின் அவர் வீரராகக் கருதப்படார். ஆகவே, அறிவாற்றல் மெய்யாற்றல் என்ற இரண்டும் வீரர்க்கு இன்றியமையாதவை.
'அறிவு அச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.