திருமதி தீபா நாகராணிஎழுத்தாளர்மதுரை

திருமதி தீபா நாகராணி.எழுத்தாளர்.மதுரை

கவிஞர் இரா.இரவி சமீபத்தில் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர். அவரின் ஹைக்கூ உலகம் நூல் குறித்து மதிப்புரை நிகழ்த்தும் வாய்ப்பு மகிழ்வுக்குரிய ஒன்று. தொடர்ந்து அன்னாரின் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். மதுரையில் நடக்கும் எந்த ஒரு இலக்கியக் கூட்டத்திலும் அவரின் வருகை இருக்கும். தன்னை முன்னிலைப் படுத்தாமல் தகுதி உள்ளவர்களையும் வளர்த்துப் பார்க்க வேண்டும் என்கிற உன்னதம் எண்ணம் கொண்ட பண்பாளர். வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள், திருமண நாள் என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் பார்வையற்றவர்களின் விடுதியில் அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை மொத்தமாக வழங்குவதாகட்டும் சிறப்புக் குழந்தைகளின் பள்ளிகளுக்கு சென்று இனிப்புகளை கொடுப்பதாகட்டும் கொண்டாட்டம் என்பதைப் பிறருக்கு உதவ வேண்டும் என சொல்லாமல் செயல்கள் மூலம் பலருக்கும் கற்பிப்பவர். அரவணைப்பும், ஆறுதலும், தேவைப்படுபர்களை நோக்கி எந்த ஓர் எதிர்பார்ப்புமின்றி இயன்ற அளவுக்கு தன் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கும் இரவி ஐயா அவர்களின் நூலைப் பற்றிய மதிப்புரையை பெருமிதத்துடன் பகிர்கிறேன்.
இந்த நூல் பொன் குமார் எனும் கவிஞரின் மதிப்புரைகளால் நிறைந்துள்ளது. இறுதியில் இரவி அவர்களுடனான நேர் காணலும் உள்ளது. பகலில் சூரியன் இரவில் நிலா தங்கிச் செல்ல ஒரே கிணறு போன்ற புகழ் பெற்ற பல ஹைக்கூக்களை எழுதியவர். எனவே வெகு நிதானத்துடன் ஒவ்வொரு ஹைக்கூ நூலையும் படித்து விரிவாக எழுதியுள்ளார்.
1997 இல் ஹைக்கூக்கள் என்கிற முதல் தொகுப்பு வெளியாகிறது. அதன் பின்னர், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, மனதில் ஹைக்கூ, நெஞ்சத்தில் ஹைக்கூ, 1000 ஹைக்கூ, ஹைக்கூ 500, ஹைக்கூ உலா, ஹைக்கூ விருந்து, ஹைக்கூ ஆற்றுப்படை, ஹைக்கூ முதற்றே உலகு, உதிராப் பூக்கள் என பல தலைப்புகளில் இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைக்கூக்களை எழுதி இருக்கிறார்.
ஹைக்கூ என்பது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கவிதை வடிவம். சுருங்கச் சொல்லி விளங்கக் கூறுதல் என்பதே இதன் சிறப்பு. பொதுவாக ஜப்பான் ஹைக்கூ இயற்கையைப் பாடும் போது தமிழ் ஹைக்கூ சமூகத்தின் பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேசுகிறது. பாரதியார் வழியாக ஹைக்கூ தமிழுக்கு வந்தாலும் சுஜாதா, அப்துல் ரகுமான் போன்றவர்களால் பரவலாக மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிற்றதழ்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 90களில் மு. முருகேஷ் போன்றவர்கள் தீவிரமாக ஹைக்கூ எழுத ஆரம்பித்த போது இளைஞர் கூட்டம் பரவலாக ஹைக்கூ எழுத ஆரம்பித்தது. அந்த சூழலில் எழுத வந்த இளைஞர் தான் இரா. இரவி.
இவரின் முதல் தொகுப்புக்கு சாலமன் பாப்பையா அணிந்துரை வழங்கி இருக்கிறார். எந்தத் துறையில் இருந்தாலும் உச்சத்தில் இருப்பவர்களின் நட்பு இவருக்கு எளிது. அந்த வகையில் அப்துல் கலாம், இறையன்பு, இந்திரா சௌந்தரராஜன், நடிகர் சத்தியராஜ் போன்ற பலரும் அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள்.
ஹைக்கூவைப் பொறுத்த வரை அதன் முதல் வரி ஒரு செய்தியைத் தருகிறது. இரண்டாவது வரி ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. மூன்றாவது வரியில் ஒரு திருப்பம். வெறும் பத்து சொற்களுக்குள் இத்தனையும் சொல்வது என்பது சவால். உதாரணம் இரா இரவி அவர்கள் எழுதிய குழந்தை அழுதது, குடிக்காத பாம்புக்கு, புற்றில் பால். இப்போது மேலே உள்ள வரியைப் படித்தால் தெளிவாகும்.
மரியாதைக்காக நிறுவப்பட்டவை சாதிச் சண்டைக்குத் துணையாய் தலைவர் சிலைகள் " - தலைவர்களின் சிலைகள் வைக்கப்படுவதின் நோக்கம் சிதைந்து போய் உள்ளதைக் காண்கிறோம். சில நேரங்களில் நாம் ஒன்று நினைத்து செய்ய அதற்கு நேர்மாறாய் அதன் விளைவு இருப்பது கண்கூடு.
பேருந்து நின்றது, பயணி வருந்தினான், வெள்ளரிச் சிறுவன் மகிழ்ந்தான். ஒருவரின் பிழைப்பு மற்றவரின் வருத்தத்திலும் இருக்கலாம். உலகெங்கும் சுக துக்கம் இப்படியான சமன்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றம். இந்த ஹைக்கூ இன்னொரு கவிஞர் எழுதிய ' கைகளில் பிஞ்சு, கைகளும் பிஞ்சு, வெள்ளரி, எனும் அழகிய ஹைக்கூவை நினைவுபடுத்தியது.
பறக்கு முடியும் பறவை, பறக்க முடியாத மனிதன், உயர்திணை எது? இது சிந்திக்கத் தூண்டும் ஹைக்கூ. ஏனெனில் நாம் பறவையை எப்போதும் அஃறிணையாக மட்டும் அடையாளப்படுத்துவோம். ஆனால் பறவை மனிதனால் செய்ய முடியாத ஒன்றான பறத்தலை செய்கிறது. அப்போது யார் உயர்திணை? திணையை உருவாக்கியது மனிதன் என்பதால் அவன் சௌகரியத்துக்கு தன்னை வைத்துக் கொண்டுள்ளான். பறவையாக இருக்கும்பட்சத்தில் அதன் பார்வையில் மனிதர்கள் எல்லோருமே ஊனமுற்றவர்கள்.
மாதா, பிதா குரு ஒரே வடிவில் மனைவி. கிட்டத்தட்ட தெய்வத்திற்கு இணையான இடத்தை அளித்தது மட்டுமின்றி முன்னால் உள்ள மூவரையும் இணைத்தும் ஒரே உருவில் மனைவி என்கிறார். இதை படித்த பின்னர் அவரின் மனைவிக்கு எதற்கும் மறுப்பு சொல்ல எப்படி மனம் வரும்? இப்படி எழுதும் பேசும் வித்தையை ஆண்கள் கற்றுக் கொள்வது அவர்களின் சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் யுக்தி.
இதே போல பல ஹைக்கூக்கள் அறிவுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளன.
புட்டிப் பாலை புகழ்ந்து தாய்ப்பாலை பழிப்பார்கள் ஆங்கிலப் பள்ளியினர் என்கிற வரிகள் மூலம் தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.
இவருடைய ஹைகூக்களை மதிப்புரை செய்யும் பொன் குமார் பல ஆலோசனைகளையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்தி உள்ளார். சகலத்தையும் அப்படியே நம் முன் வைக்கும் நேர்மைக்கு ஒரு சல்யூட். அவரின் பார்வையில் ஒரே பாடு பொருளில் ஒரு ஹைக்கூ போதுமானது. படித்த புத்தகத்தில் உள்ள அத்தனை ஹைக்கூக்களும் சிறந்தது அல்ல, ஒன்றிரண்டு மட்டும் நன்றாக இருக்கும், அவையே வரலாற்றில் பதியும். எழுதி வெளிவந்த ஹைக்கூக்களின் எண்ணிக்கை பிரமிக்க வைத்தாலும், எழுதியவற்றில் மிகச் சிறந்தவற்றை மற்றும் வெளியிடும் நிதானம் தேவை என அறிவுறுத்துகிறார்.
மனிதநேயம் மிகுந்துள்ள இரவி அவர்களின் வரிகளில் நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி உள்ளது. தான் ஒரு இந்தியன், தமிழன் என்பதை விட தான் மனிதன் என்கிற அடிப்படையில் ஓட்டு மொத்த உலகிற்கான மனிதம் அவரின் ஹைக்கூவில் வெளிப்படுகிறது. இதுவே கலைஞனின் அசல் குணம்.
தொடர்ந்து சமூக அவலங்கள், மூட நம்பிக்கைக்கு எதிராக இவர் கொடுக்கும் குரல் வலிமையானது.
பழமொழியை அடிப்படையாக வைத்து சில ஹைக்கூக்கள் எழுதி இருந்தாலும் பழமை வாதத்திற்கு எதிரான கருத்தையே அவை தாங்கி இருக்கின்றன. எனினும் பழமொழி, சொலவடை, விடுகதை போன்றவற்றைப் பயன்படுத்தி எழுதுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் கவிஞரின் எழுத்தாற்றல், செய்நேர்த்தி, வெளிப்பாட்டுத் தன்மை உயர்வானது.
பரிதி இல்லாமல் இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் இருக்காது. அது போல தமிழில் துளிப்பா வரலாறு எழுதினால் அதில் இரவி அவர்களின் பெயரை விடுத்து எழுத முடியாது.

--

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (27-May-25, 10:36 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 8

மேலே