ஈனுமோ வாழை இருகால் குலை - பழமொழி நானூறு 221
நேரிசை வெண்பா
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின்வண்(டு) ஆர்க்கும் புனலூர! ஈனுமோ
வாழை இருகால் குலை. 221
- பழமொழி நானூறு
பொருளுரை:
இனிய ஓசையையுடைய யாழைப்போல வண்டுகள் ஒலிக்கும் புனல் நிறைந்த மருத நிலத் தலைவனே!
வாழை இருமுறை குலைகளை ஈனுமோ? ஈனாது;
அதுபோல், முன்பு ஒருமுறை பிழை செய்தவனைப் பொறுத்தவர்கள், அதன் பின்னரும் குற்றம் செய்தால் பொறுப்பார்களோ? பொறுக்க மாட்டார்கள்.
கருத்து:
சான்றோர் அறிவிலார் செய்த குற்றத்தை ஒருமுறையன்றிப் பொறுக்க மாட்டார்கள்.
விளக்கம்:
அறிவிலார் மீண்டும் மீண்டும் தீங்கு செய்தவராய்த் திரிவாரானால், அவர்க்கு மிக்க துன்பம் வரும் என்பது கருதி, அவரை நன்னெறியில் நிறுத்தற்பொருட்டு இரண்டாவதுமுறை தீங்கு செய்யின், அதற்குத் தக்க தண்டனையை யளிக்கப் பெரியோர் முற்படுவர்.
ஆதலாற்றான் 'பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ' என்றார்.
'ஈனுமோ வாழை இருகால் குலை' என்பது பழமொழி.