386 கையேந்தும் ஏழைபோல் கடவுளும் வருவன் - கைம்மாறு கருதா உதவி 4
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
சாந்தமார் வறியர் போலத்
..தற்பரன் வருவான் தாவென்(று)
ஏந்துகை வீடு கொள்ளென்
..றேந்துகை யாமக் கையில்
ஈந்தபொன் விலைபோல் வீட்டுக்
..கிட்டபொன் னாமன் னாரைக்
காய்ந்திலை யென்போர் வேண்டோங்
..கதியென்பார் போலு மாதோ. 4
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பொறுமை மிக்க ஏழை போல முழு முதற் கடவுள் வருவான். ஒன்று வேண்டித் தருக என்று நம்மிடம் ஏந்தும் கை, நமக்கு வேண்டிய பேரின்ப வீட்டைப் பெற்றுக் கொள் என்று தரும் கையாகும்.
அக் கையில் விருப்புடன் கொடுத்த பொருள் அவ்வீட்டுக்கு நாம் நல்கிய விலைப் பொருளாகும்.
அத்தகையவனைச் சினந்து இல்லையென்று கூறுவோர், வீடு வேண்டாமென்று மனமாரச் சொல்பவரைப் போல்வர்” என்கிறார் இப்பாடலா சிரியர்.
சாந்தம் - பொறுமை. தற்பரன் - கடவுள்.
காய்ந்து - சினந்து. கதி - வீடு.