அஞ்செவிக்கு அழகு அறிவுரை கேட்டல் – அறநெறிச்சாரம் 198

நேரிசை வெண்பா

புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல - நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞானம் நீக்கி
மறவுரை விட்ட செவி 198

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து அழகிய அணிகள் அணியப் படுவன செவிகளல்ல;

நுண்ணிய அறநூற் பொருள்களைக் கேட்டாராய்ந்து அறியாமையைப் போக்கி பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளாது ஒழிவன செவிகளாகும்.

குறிப்பு:

நுண்மை நூல் - நுண்ணூல், போழ்தல் – பிளத்தல், குத்தல், அறம் x மறம்: எதிர்மொழிகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-22, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே