இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு - நாலடியார் 332
இன்னிசை வெண்பா
பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு 332
- பேதைமை, நாலடியார்
பொருளுரை:
குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கி இருப்பாரது இழிதகைமை,
பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர் முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.
கருத்து:
நடவாததொன்றை நினைவது பேதைமையின் இயல்பு.
விளக்கம்:
ஒருங்கு - எல்லா அலைகளும் உடன் சேரல், ஓசையென்றது, இலக்கணையால் அலையின் மோதுதலை யுணர்த்தும்.