அறநூலைக் கேட்டு அறிந்தனவே அழகிய செவிகளாம் – அறநெறிச்சாரம் 199

நேரிசை வெண்பா

கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல - கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி 199

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் குண்டலங்கள் அணியப்படுவன செவிகள் ஆகா;

உலகில் அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்து கொண்டு அவற்றுள் தலைமையான அறநூலைத் தடையின்றிக் கேட்டு ஆராய்ந்து இன்புறுதற்குக் காரணமாவன செவிகள் ஆகும்.

குறிப்பு:

சூன்று: சூல் என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். சூலல் - தோண்டுதல்; ஈண்டு ஆராய்தல் ''நுங்கு சூன்றிட்டன்ன'' நாலடியார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-22, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே