கடவுட் காட்சிகளைக் கண்டனவே கண்களாம் – அறநெறிச்சாரம் 200
நேரிசை வெண்பா
பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல! - மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண் 200
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து அழகிய நீலமணி போல எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா;
காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.
குறிப்பு:
பொரு - ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம்.
''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி