மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் – நாலடியார் 333

நேரிசை வெண்பா

குலந்தவங் கல்வி குடிமைமூப்(பு) ஐந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் 333

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம், ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும் தடையின்றிப் பெற்றவிடத்தும், இன்பம் நிரம்பிய தீதற்ற தொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலக ஒழுக்கம் அறியானாயிருத்தல் நெய் இல்லாத பாலடிசிலுக்கு ஒப்பாகும்.

கருத்து:

உறுதிப்பொருள் அறியாமை பேதைமையின் இயல்பு.

விளக்கம்:

குடிமையென்பதிற் குடிப்பிறப்பும் அடங்குதலின், குலம் என்றது சார்பென்னும் பொருளையும், மூப்பு என்பதில் உலகியலறிவும் அடங்குதலின் உலகமென்பது வீட்டுலகமென்னும் பொருளையும் உணர்த்தும்;

விலங்குதல் குறுக்கிடுதலாகலின், விலங்காமல் என்றதற்குத் தடையின்றியென்று உரைக்கப்பட்டது!

நலஞ்சான்ற மையறு தொல்சீர்' என்னும் அடைமொழிகளின் பெருமை கருத்திருத்தற் பாலது; இதனால் இன்பம் நிரம்பிய மாசில்லாத இயற்கை ஒழுங்கோடு கூடிய ஒழுக்கமே அந்நிலையினை உய்க்கும் என்றறிந்து கொள்ளல் வேண்டும்;

பாற்சோறாயினும் நெய்யின்றி மாட்சிமைப்படாமை போல எத்துணைச் சிறந்த வாழ்க்கை நலங்களும் இயற்கை அருளொழுக்கமின்றி நலப்படாவென்பது இதனாற் பெறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-22, 5:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே