உடலரு மன்னர் உவப்ப வொழுகின் கடல்படா வெல்லாம் படும் - பழமொழி நானூறு 225
இன்னிசை வெண்பா
விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரு மன்னர் உவப்ப வொழுகின்
மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப
கடல்படா வெல்லாம் படும். 225
- பழமொழி நானூறு
பொருளுரை:
மடல்களையுடைய பனைமரங்கள் மலிந்த கடல் நாடனே!
பிறரால் வெல்லுதற்கரிய வலிமை உடைய அரசர்கள் தம்மைவிட்டு நீங்குமாறு நெருங்கி நின்று ஆகாதன செய்தும், அஞ்சி அகன்று நில்லாது அவர் மனமகிழ ஒழுகுவராயின் கடலில் உண்டாகாத வளமெல்லாம் அவர்க்கு உளவாம்.
கருத்து:
மன்னரைச் சேர்ந்தொழுகுவார் அகலாது அணுகாது வாழக்கடவர்.
விளக்கம்:
விடலமை செய்து என்றது, அவர் தம்மை நீக்குமாறு குறிப்பறியாது அணுகிச் சில கூறுதலை. இதனால் கூறுவார்க்குத் துன்பமே உண்டாம்.
அகன்று நில்லாது என்றது அரசருக்குப் பயந்து நீங்கி நிற்றலை. இதனால் அரசரால் வரும் பெரும் பயன் இல்லையாம்.
உவப்ப ஒழுகின் என்றது, அகலாது அணுகாது தீக்காய்வார் போன்று ஒழுகுக வென்பதாம்; உடலரு மன்னர் என்றார் பிறரும் 'இகல் வேந்தன்' என்றலின்.
அரசரால் மிக மதிக்கப்பட்டு விழுப்பயனை எய்துவார் என்பார், 'கடல்படா எல்லாம் படும்' என்றார்.
'கடல்படா எல்லாம்படும்' என்பது பழமொழி.