தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார் பரியார் இடைப்புகார் - பழமொழி நானூறு 244

இன்னிசை வெண்பா

தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
அரிவாரைக் காட்டார் நரி. 244

- பழமொழி நானூறு

பொருளுரை:

பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே!

நெல்லரிவோர்களுக்கு அவ்வேலை கெடும்படி நரியைக் காண்பியார்;

அதுபோல, ஆராய்ச்சி உடையாருடன் ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார் நுண்ணறிவு இல்லாரிடம், அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான், செல்லார்.

கருத்து:

அறிவுடையார் தம் போன்றாரை அறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.
:
விளக்கம்

அறிவிலார் குணங்களை அறிவாராதலால் அவரைக் காட்டி வீணே காலங்கடத்தித் தம் வேலையைக் கெட்டொழியார் என்பதாம்; தெரிதல் - உண்மையை ஆராய்தல், தெரிவு - உண்மையை அறியும் அறிவு (ஆராய்ச்சி),

'அரிவாரைக் காட்டார் நரி' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-22, 11:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே