பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர் - கயமை, நாலடியார் 354

நேரிசை வெண்பா

கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர். 354

- கயமை, நாலடியார்

பொருளுரை:

பக்கம் உயர்ந்து அகன்ற அல்குலை உடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர், தமது பெண்மை இயல்பை சேடியர் போல் புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;

ஆனால் மற்ற தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம் போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப் புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்து வரம்பு கடந்து நடப்பர்.

அதுபோற் கயவர் டம்பத்தால் அவமானப்படுவர்.

கருத்து:

கயமை உள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும்.

விளக்கம்:

கோடேந்து அகலல்குல் என்னும் அடைமொழி இங்கே நல்லிலக்கணந் தேற்றிப் பெண்டிர் நற்பெண்டிரென்பது உணர்த்திற்று. ஒப்பனை செய்துகொள்ளாமைக்குச் சேடியர் உவமமாயினார்.

சேடியர்: female attendants

புதுப்புனலுவமம் ஈண்டு ஒப்பனை ஆரவாரம் முதலியவற்றிற்கு வந்தது.

மதித்திறப்பரென்பதற்கு, பிறர், பொருள் தந்தபோது அவரை மதித்துத், தராதபோது மீறிஒழுகுவர்.

உவமமும் இதற்கொக்குமென்பது, ‘புதுப்புனலும் மாரியறவே அறுமே அவரன்பும்வாரியறவே அறும்' (நாலடியார் 370) என மேலும் இவ்வியல்புதேற்றி வருதலால் அறியப்படும்.

உவமமட்டுங் கூறி இச்செய்யுள் அறிஞர் கயவர்களியல்பு உணர்த்தலின், இது பிறிது மொழிதலென்னும் அணி.

அறிஞர் அடக்கமாகவும், கயவர் ஆடம்பரமாகவும் ஒழுகுவரென்பதும் இதனாற் பெறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-22, 11:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே