ஆகுமோ நந்துழுத எல்லாம் கணக்கு - பழமொழி நானூறு 245
இன்னிசை வெண்பா
தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ?
நந்துழுத எல்லாம் கணக்கு. 245
- பழமொழி நானூறு
பொருளுரை:
வலிமை தங்கிய மலைபோன்ற மார்பையுடையாய்!
நத்தையாற் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? ஆகாது.
அதுபோல, தம்முடைய தொழில் திறமையுற நடத்தும் தன்மையுடையார் செய்கின்ற செயல்கள் கொடுஞ்செயலை உடையாராகிய சினமுடையவர்களுக்குச் செய்தல் இயலுமோ? (இயலாது).
கருத்து:
மேன்மக்கள் செய்யும் காரியங்கள் கீழ்மக்களுக்குச் செய்ய இயலா.
விளக்கம்:
'தவம் செய்வார் தங்கருமம் செய்வார்' என்றபடி தந்தொழில் ஆற்றும் தகைமையார் தவத்தைச் செய்யும் துறவிகள் ஆவர். உடம்பிற்கு வருத்தம் வருமென்றொழியாது தவத்தினைச் செய்ய அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடுபெறுமாகலின் தவம் செய்தல் தம் தொழில் எனப்பட்டது.
'ஆகுமோ நந்து உழுத எல்லாம் கணக்கு' என்பது பழமொழி.