599 ஈன்றார் கடுஞ்சொல் ஏற்றலே கடனாம் – தாய் தந்தையரை வணங்கல் 1
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
தளர்வுறு மூப்பால் ஈன்றோர்
..சாற்றும்வன் மொழிபொ றாது
கிளர்வறு சினம்மீக் கொள்ளும்
..பாவிகே ளவருன் னாலுன்
இளமையில் உறுந்துன் பங்கட்
..கிடைந்துசற் றுனைஓம் பாரேல்
வளருவாய் கொன்னீ யின்னே
..வாழ்வைகொல் முனிவை கொல்லோ. 1
– தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
உடலும், உளமும், உணர்வும் தளர்வுற்று மூப்பெய்திய இருமுதுகுரவராம் தாய் தந்தையர்
பசி, நோய், குற்றங்காண்டல் முதலியவற்றால் பொறுமை இழந்து, கடுஞ்சொல் சொல்வர்.
அச்சொற் பொறாது மக்கள் மனக்கிளர்ச்சியை அவிக்கும் சினங்கொள்ளுதல் கூடாது.
கொள்வாரேல் பெரும் பாவியராவர். அப் பாவிகள் ஒன்று உணரவேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்குங்கால் அப்பிள்ளைகளின் இளமைப் பருவத்தில்
தாங்கள் எய்தும் சொல்லொணா அல்லலுக்கு அஞ்சிப் பேணாது விட்டுவிடுவராயின்,
பிள்ளைகள் கட்டிளமைப் பருவம் எய்துமா? மணம் பூண்டு வாழுமா? இப்பொழுது
செய்யும் தகாத சினத்தினைத்தான் செய்யுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தளர்தல் - சோர்வடைதல். மூப்பு - முதுமை. ஈன்றோர் - தாய்தந்தையர்.
வன்மொழி - கடுஞ்சொல், இடைந்து - வருந்தி. முனிவு - சினம்.