332 தீயவர் பலரும் தீயரைச் சேர்வர் - தீயரைச் சேராமை 1

கலி விருத்தம்
(கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா)

செழுமல ரிடைமது சிறையளி நுகரும்
முழுவிட மதுபெறு முனிவுடை யரவம்
பழுதறும் அறநிலை பயிலுவர் சிலரே
வழுவய லவரிட மருவுவர் பலரே. 1

- தீயரைச் சேராமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”சிறந்த பூக்களிலுள்ள தேனை சிறகுடைய வண்டுகள் உண்ணும். சீறும் அரவமும் முழு நஞ்சினையே பெறும்.

குற்றமற்ற நன்னெறியை சிலரே கடைப்பிடிப்பர். தீநெறியுடைய வேறு பலர் குற்றமுடைய பிறரிடம் கூடுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அளி - வண்டு. முனிவு - சீற்றம். பயிலுவர் – கடைப்பிடிப்பர், வழு - குற்றம்.
மருவுவர் - கூடுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-22, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே