229 கள்ளுண்போர் கழிவுண்ணும் ஈயினை ஒப்பாவர் – மது அருந்துவதன் விளைவு 4

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பாலினைத் தேனையின் பாகை நீத்துவெண்
மாலியை மாந்துவோர் மலர்க்கள் நீத்துமெய்த்
தோலிர ணந்தனைச் சூத கந்தனைக்
கோலியுண் டுவக்குமீக் கூட்ட மொப்பரே. 4

– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பொருளுரை:

”உயர்வாகிய பசுவின் பாலும் தேனும் இனிய வெல்லப்பாகும் விடுத்து வெண்மையான கள்ளை நாவால் துழாவி பேராவலுடன் பருகுவோர், மலர்களை விட்டு உடலின் தோலில் உள்ள புண்ணையும், கழிவுக் குருதியையும் வாரியுண்டு மகிழும் ஈக்கூட்டத்தினை ஒப்பாவர்” என்று கள்ளுண்போரை இப்பாடலாசிரியர் கடுமையாக இடித்துரைக்கிறார்.

இரணம் - புண். சூதகம் - கழிவுக்குருதி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 12:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே