569 அன்பொன்றே நாடி ஆண்டானைத் தொழு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 27

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தடியடிக் கஞ்சி யீவோன்
..தருமனோ கற்பைக் காந்தன்
கொடியனென் றஞ்சிக் காப்பாள்
..சதிகொலோ வீசன் மாட்டுப்
படிறறு மன்பே யன்பாம்
..பயத்தினா னயத்த வாவான்
முடிவிலான் பாற்கொள் பத்தி
..முத்தியி லுய்த்தி டாதால். 27

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கொடிறுடைக்கும் கூன்கையர்தம் தடியடி பொறுக்காது அஞ்சி அவலமுடன் ஈவோன் அறவோன் ஆகான். கணவன் கொலை முதலிய கொடுமை செய்வனே என்று அஞ்சித் தன் கற்பைக் காத்துக்கொள்பவள் கற்புடைய மனைவி ஆகாள்.

இவைபோல், ஆண்டவனிடத்தும் பொய் கலவாமல் வைக்கும் அன்பே சிறந்த அன்பாகும். அவ்வாறில்லாமல் அச்சத்தால், நயத்தால் ஒன்றை ஆசைப்படுவதால் என்றும் ஒருபடித்தாயுள்ள இறைவனிடத்து வைக்கும் அன்பு இறவாப் பேரின்பத்துச் செலுத்தாது.

தடி-கம்பு. தருமன்-அறவோன். காந்தன்-கணவன்.சதி-மனைவி. அவா-ஆசை. முடிவிலான்-என்றும் ஒருபடித்தாயுள்ளவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 3:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே