108 அமைஉடன் பிறப்பை வெல்லார் அனைவரும் - உடன் பிறந்தார் இயல்பு 5
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ
தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
ஓரிழை யறுத்திடல் எளிதொன் றாகவே
சேரிழை பலவுறத் திரித்த தாம்பினை
யாருமே சிதைத்திடா ரமைச கோதரர்
சீரொடு பொருந்திடில் திரல்கொள் வாரரோ. 5
- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
கயிறு திரித்தற்கு உரிய ஒரு இழையினை அறுப்பது யாவர்க்கும் எளிது. அவ்விழைகளே பலவற்றை ஒன்றாகச் சேர்த்துத் திரித்து அமையப்பெற்ற கயிற்றினை, யாராலும் அறுத்துச் சிதைத்திட முடியாது.
அது போல ஒற்றுமைடன் அமைந்த சகோதரர்கள் சிறப்புடன் ஒன்றுகூடி வாழ்ந்து வந்தால், வலியரும் அவர்களை அழிக்கத் துணிவு கொள்வார்களோ, கொள்ள மாட்டார்கள் என்று சகோதரர்களுக்குத் தெளிவு படுத்துகிறார்.