நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே - பழமொழி நானூறு 270
இன்னிசை வெண்பா
நற்கறி(வு) இல்லாரை நாட்டவும் மாட்டாதே;
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!
கற்றறிவு போகா கடை. 270
- பழமொழி நானூறு
பொருளுரை:
மலையினின்றும் பாறையின்மேல் விழும் விளங்குகின்ற அருவி பாயும் நல்ல நாட்டை உடையவனே!
சொல்லால் குறிக்கப்படும் பொருளை உடுக்கையைக் கொண்டு (அதன் கண்) பண் உண்டாக்குவதைப் போல,
மிகவும் இயற்கையறிவு இல்லாரை கல்வியறிவைப் போதித்ததனால் சிறந்தவனாக நிலைநாட்ட முடியாது. ஆகையால், நூல்களைக் கற்றலால் ஆகிய அறிவு முற்றிலுஞ் செல்லாது.
கருத்து:
கல்வியறிவோடு இயற்கையறிவும் உடையான் சிறந்து விளங்குவான்.
விளக்கம்:
துடி தட்டினாலன்றி ஓசை உண்டாகாதவாறு போல, இயற்கை யறிவில்லான் அறிவுறுத்தபோது அன்றி மற்றைய நேரங்களில் அறியான். நன்கறிவு என்பது நற்கறிவு என வலித்தல் விகாரம் பெற்றது.
'கற்றறிவு கடைபோகா' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.