பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

அன்று ஒரு முக்கியமான நாள்.முதல்முதலாக எங்கள் மகளை பெண் பார்க்க வருகிறார்கள். வீடெங்கும்
ஒரே பரபரப்பு. சரண்யா பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தாள்.மகள் நிரல்யாவின் முதல்
பெண்பார்க்கும்நிகழ்வானதால் ஒன்றும் குறைவாக இருக்கக்கூடாது என்பதால்,தானே
எல்லாவற்றையும் சரிபார்த்து கொண்டிருந்தாள்.
வீட்டில் எல்லாம் சரியான இடத்தில வைக்கப் பட்டுள்ளதா பார்ப்பதற்கு வீடு சுத்தமாக இருக்கிறதா
என பலமுறை தன்னையே கேட்டு கொண்டு அவளே அதற்கான பதிலையும் கூறிக்கொண்டாள்.
பின்னர் கணவனிடம் ஏங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா?எப்பவராங்க?
கைபேசியில அவர்களை கூப்பிட்டு பாருங்கள் என பதட்டத்துடன் கூற,
ஒரு வித எரிச்சலுடன் அவள் கணவன் வெங்கட் இன்னும் நான் அவங்களை தொடர்ப்பு
கொள்ளவில்லை அவுங்க தான் சாயங்காலம் 4-மணிக்கு வரேன்னு நேத்தே சொன்னாங்கள அப்புறம்
எதுக்கு சும்மா சும்மா அலைப்பேசில அவங்களை தொந்தரவு செய்யனம்…கிளம்பும் போது அவுங்களே
கூப்பிடுவாங்க …

அந்நேரம் அங்கு வந்த நிரல்யா சரியா சொன்னீங்க அப்பா…இந்த அம்மா காலை-ல இருந்து வீடே
இரண்டு பண்ணிட்டு இருக்காங்க…..என்னமோ இன்னைக்கே கல்யாணம் நடக்க போறமாறி…

அதைக்கேட்ட சரண்யா ஆவேசத்துடன் அப்பாவும்,பொண்ணும்
சேர்ந்துட்டீங்களா…. இனி நான் சொல்லுறதை எங்க கேட்க போறீங்க…. என்னமோ செய்யுங்க…..

அம்மா நான் என் தோழி வீட்டுக்கு போய்விட்டு மதியம் தான் வருவேன்….

என்ன விளையாடுறீயா?? இன்னைக்கு எங்கேயும் போகக்கூடாது…. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
வராங்க…. அதை மனசுல வச்சுக்கோ….

பாருங்க அப்பா அவுங்க சாயங்காலம் தானே வராங்க… இப்ப காலை பத்து தானே…. மதியம்ஒரு
மணிக்குள்ளே வந்துடுவேன்…. அம்மாக்கு எடுத்து சொல்லுங்க அப்பா….

சரி விடு சரண்யா கொஞ்சநேரம் போய்விட்டு வரட்டும்… நிரல்யா அப்படியே உன் தோழி
நிலாவையும் கூட்டிண்டு வாம்மா…. சாயங்காலம் உனக்கு துணையவும் ஒத்தாசையாவும்
இருக்கும்…. அப்பான்னா அப்பாதான்… சரிஅப்பா… கண்டிப்பா கூட்டிட்டுவரேன்….தன்னுடைய
வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்….. மதியம் முடிந்து 4 மணியை நோக்கி
நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது நிரல்யா வரவே இல்லை…கடிகாரத்தின் பெரிய மற்றும் சின்ன
முள் 4-ல் சரியாக நின்றவுடன் மணி டங் ட ங் டங் என்று ஒலித்தது…… அந்த ஒலியின் அதிர்வு
சரண்யாவை பதற வைத்தது. அவளின் இதயத்தில் ஒரு சிறிய வலி வந்ததுபோல் உணர்ந்தாள்….

என்னங்க இன்னும் நம்ம பெண்ணைக் காணோம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்ப
வந்துடுவாங்களே. இதுக்குத்தான் சொன்னேன் அவளை அனுப்பாதீங்கன்னு சொன்னா
கேட்டீங்களா….. அவளுக்கு இந்த சம்மந்தத்திலே கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை ….அதான் இப்படி
பண்ணிப்பிட்டா
இப்ப எதுக்குக் கவலைப்படுற…அதெல்லாம் நம்ம பொண்ணு சொன்னா சொன்னமாதிரி
வந்துடுவா…. இரு நான் அலைப்பேசி எடுத்துப் பேசுகிறேன்… எங்க இருக்கான்னு தெரிஞ்சுடும்….
வெங்கட் அலைப்பேசியை எடுத்து நிரல்யாவை அழைக்கும் போது….வெளியில் இருந்து ஒரு
குரல்….அப்பா அப்பா
என்னங்க நம்ம பொண்ணு வந்துட்டான்னு நினைக்கிறேன் என்று சரண்யா வேகமாக வெளியே
ஒடினாள்….. வாம்மா நிலா என கூறியவள் நிரல்யா எங்கே? இவ்வளவு நேரம் எங்கே போனீங்க?
கொஞ்சமாவது உங்களுக்கு பொறுப்பு இருக்கா…. எங்கே அவ?
என்னம்மா நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க….நிரல்யா எங்கே? எங்க வீட்டுக்கு
காலையிலேயே வரேன்னு சொன்னா இன்னும் வரலையே என்ன ஆச்சுன்னு பார்த்து விட்டுப்
போலாம் என்று வந்தேன் என்றாள்.
அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது
சரண்யாக்கும், வெங்கட்டுக்கும் அந்த ஒருநொடியில் எண்ணங்கள் அலைபாயத் தொடங்கியது….. தன்
மகளுக்கு என்ன நடந்ததோ?எங்கு இருக்கிறாளோ என்று…. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து
நின்றது…. மேலும் ஒரு படபடப்பு இடி தன் தலையில் இறங்கியதைப்போல் உணர்ந்தாள் சரண்யா
காரில் வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேய் முழி
விழிக்க சற்று சுதாரித்தவளாய் அவர்களை வரவேற்றாள் வெங்கட்டுடன் சேர்ந்து வாங்க
வாங்க….என்று நிரல்யாவின் பெற்றோர்கள் கூறுவதற்கும் அவர்களே கேட்டை திறந்தனர்.
.வரவேற்பின் பாகமாக அவர்களுக்கு சுடசுட அழகிய பீங்கான் கப்புகளில் தேநீர் அதே டிசைனில்
உள்ள தட்டுகளில் பலகாரங்களைப் பறிமாறினாள்.அவர்கள் அதை ருசிபார்க்கும் வேளையில்
நிரல்யாவின் தந்தை தங்கள் குடும்பத்தைப்பற்றியும் நிரல்யாவைப்பற்றியும் அறிமுகம்
கொடுத்துக்கொண்டு இருந்தார்… மாப்பிள்ளைவீட்டாரும் அவர்களைப்பற்றி அறிமுகம்
கொடுத்துக்கொண்டு இருக்கையில் யாரோ வாசலில் வந்து நின்று வீட்டில் உள்ள அழைப்புமணியை
ஒலிக்க ….
சரண்யா வேகமாய் ஒடிச்சென்று தன் மகளோ என்று பார்க்கையில் சற்று ஏமாந்தவளாக யாரு தம்பி
நீ? என்ன வேணும்
என் பேரு நிரஞ்சன் …நான் தான் மாப்பிள்ளை என்றான் அப்படியே செய்வதறியாது முழித்தாள்
சரண்யா. என்னை உள்ள கூப்பிடமாட்டிங்களா என்று நக்கல்செய்தான் நிரஞ்சன், சற்று
சுதாரித்தவளாய் அப்படிஎல்லாம் இல்லை மாப்பிள்ள உள்ளே ஒரு பையன் உட்கார்ந்து
இருந்தான்,அவர்தான்
மாப்பிள்ளை என்று நினைச்சேன்… திடீர் என்று நீங்க வந்து நான் தான் மாப்பிள்ளை என்றதுமே
எனக்கும் ஒன்னும் புரியல … அதான் மன்னிச்சுக்கோங்க….
பரவாயில்லை அத்தை… இதுலே என்ன இருக்கு…..நீங்க என்னுடைய அம்மா மாதிரிதான்
உங்களைப் போய் தப்பா நினைப்பேனா? என்று கூறியதும் அவள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடியது
ஒருபக்கம் தன் மகள் இன்னும் வரவில்லையே என்று மனம் குமுறியது… மாப்பிள்ளைக்குத் தேநீர்

எடுத்துக் குடுத்து அமரச்செய்தாள்.பெண்ணை கூட்டிட்டுவாங்க என்று மாப்பிள்ளையின் அம்மா
கேட்டவுடன் ஒருவித பதற்றத்துடன் சரண்யா அது வந்து என்று தயங்கினாள்…
அப்பொழுது இதோ பெண் வந்துட்டாளே என்று மாப்பிள்ளையின் அப்பா சொல்ல சரண்யா
திரும்பிப் பார்த்தாள்,அவள் கண்ணை அவளாளேயே நம்ப முடியவில்லை… நிரல்யா
அலங்காரத்துடன் வந்துநின்றாள்…சரண்யாக்கு இப்பொழுதுதான் உயிர் வந்ததுப்போல் இருந்தது….
அவள் காதருகே வந்த நிரல்யா எப்படி நேரத்துக்கு வந்துட்டேனா இப்பாவது சிரி அம்மா… எப்பபாரு
தேவை இல்லாம கவலைப்படுகின்றாயே …சரண்யா கண்ணில் ஆச்சரியத்துடன் ஆயிரம்
கேள்விக்கணைகள், அதோடு நிரல்யாவை நோக்கினாள். நிரல்யாவும் அவளை அமைதிபடுத்தும்
விதமாக கண்ணில் சிறு சைகை காட்டினாள்….. அவர்கள் சென்ற உடனேயே எண்ணையில் போட்ட
கடுகைப்போல் சரண்யா கோபக்கணல்களை நிரல்யாவின் மீது வீசினாள். நிரல்யா ஒன்றும் பேசாமல்
மெளனமாக தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டு கொண்டாள். சரண்யா என்ன செய்வது
என அறியாமல் குழம்பியவாறு கதவையே பார்த்து கொண்டிருந்தாள். அப்பொழுது கைப்பேசி
ஒலித்தது… ஒருவித பதட்டத்துடன் அதை எடுத்தாள் சரண்யா மறுமுனையில் மாப்பிள்ளைவீட்டார்
ஹலோ என கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.உடனே பவ்யமாக சொல்லுங்க
என்னவிஷயம் என்று கேட்க மாப்பிள்ளையின் அம்மா நாளைக்கே நாங்க திரும்பவும் உங்கள்
வீட்டிற்கு வருக்கிறோம். எங்களுக்கு பெண்ணை ரொம்பபிடிச்சுப் போச்சு.. இப்படிப்பட்ட ஒரு நல்ல
பெண்ணைத் தான் நாங்க எதிர்பார்த்தோம்… எங்க பையன் உங்க பெண்ணைப் பத்தி இப்ப தான்
எங்ககிட்ட சொன்னான்…அதான் உடனே கூப்பிட்டேன். என் மருமகள் கிட்ட குடுங்க நான்
அவளிடம் பேசனும் எனக் கூற ஒன்றும் புரியாதவளாய் குழப்பத்துடன் நிரல்யாவின் அறையில்
நுழைந்து கைப்பேசியை அவளிடம் கொடுத்தாள் சரண்யா. நிரல்யா பேசி முடித்து தொடர்பை
துண்டித்துவிட்டு, தன் தாயின் குழப்பத்தை புரிந்துக்கொண்ட நிரல்யா பேசத் தொடங்கினாள்.....
அம்மா நான் காலையிலே வண்டியிலே போகும் போது சாலையில் ஒரு தாத்தா
அடிப்பட்டுக்கிடந்தார்.அங்கே இருந்த யாரும் அவரை காப்பாத்த வழி செய்யாது வேடிக்கை
பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். என்னாலே அப்படி போக முடியாம நான் அவரை அரசு
மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு போய் சேர்த்தேன்… ஆனா அங்க போய் ரொம்ப நேரம்
ஆகியும் யாரும் அவருக்கு முதலுதவி கூடக் குடுக்கவில்லை. . நேரா அங்கே இருந்த ஒரு டாக்டர்
அறைக்கு போய் அவரைச் செம்மையா திட்டிவிட்டேன்… அப்புறம் அவர் தான் வந்து அவருக்கு
வேண்டிய முதல் பரிசோதனையும் காயத்திற்கு கட்டுகளும் போட்டு காப்பாத்தினார்…அதுனாலேதான்
நேரம் ஆகிடுச்சு வீட்டிற்கு வந்து சேர அம்மா என அவள் முடிக்க சரண்யாவிற்கு உடனே கோபம்
சிறிது மாறியது ஆனால் இன்னும் ஒரு கேள்வி இருந்தது ..அதெல்லாம் சரி மாப்பிள்ளையின் அம்மா
ஏதோ சொன்னாங்க அது என்னவென்று எனக்கு புரியலயே அதுவா அது வந்து ஒன்றும் இல்லே
அந்த திட்டு வாங்கிய டாக்டர் வேற யாரும் இல்லை இன்னைக்கு என்ன பெண்ணு பார்க்க வந்த
மாப்பிள்ளைதான்….
ஆச்சரியத்துடன் அப்படியா! நீ திட்டி இருக்கே மாப்பிள்ளை உன்னை தப்பா நினைக்கப் போறாரு….
உனக்கு ஏன் இந்த ஊர் வம்பு எல்லாம்.யார் எப்படி போன என்ன நீவும் மற்றவர்களை போல
வண்டியை ஓட்டி உன் சிநேகிதி வீட்டிற்கு போயிருக்கலாம் இல்லையா.உனக்கு நாலா தெரியுமே
இன்னைக்கு பெண் பார்க்க வராங்க என்று.என்ன பெண்ணோ என்று சலித்துக்கொண்டே, ஆமா நீ
எப்படி வீட்டுக்கு உள்ளே வந்தே என்று தன் மூன்றாவது கேள்வியை கேட்க .?அதுவா பின்னாடி
சுவர் ஏறி குதிச்சு வந்தேன் சற்றே கோபத்துடன் சரஸ்வதி நிரல்யாவைப்பார்த்து என்னைக்குத் தான்
இந்த சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வைக்கப் போற நீ…..

அப்போது அங்கு இதுவரை மௌனமாக இருந்த வெங்கட் சற்று புன்னகையுடன்….தன் மனைவியை
பார்த்து ஏண்டி இப்படி பயப்பட்டு கவலைப்பட்டு குழந்தையை திட்டறே என சொல்லி, பயப்படாதே
நிரல்யா…மாப்பிள்ளை வீட்டில் இருந்து நாளைக்கு நல்ல செய்தி தான் வரும். மாப்பிள்ளை உன்னை
தப்பாக எடுத்துக்க மாட்டார் எனக் கூறியவாறு சரஸ்வதியிடம் குழந்தை எவ்வளவு பெரிய நல்ல
காரியம் பண்ணி அந்த தாத்தாவை காப்பாத்தி இருக்கான்னு பாராட்டாமே சும்மா குத்தம்
சொல்லிகிட்டே இருக்கையே என அவளைக் கடிந்து கொண்டார். அப்பாவும்,பொண்ணும் சேர்ந்து
கிட்டீங்களா இனி நான் சொல்லுகிறதை எங்க கேட்கப் போறீங்க…. என்னமோ செய்யுங்க….. என்று
சமையல் அறைக்குள் நுழைந்தாள் சரண்யா. .

இதை அனைத்தும் பார்த்த நிலா நிரல்யாவிடம் அம்மா ஏன் இப்படி எப்ப பார்த்தாலும்
கவலைப்படுறாங்க…. அவுங்க உடம்புக்கும் இது நல்லது இல்லையே நீயும் கொஞ்சம் பொறுப்பா
இருந்திருக்கலாம் …. ஒரு அலைப்பேசில நீ அவளை கூப்பிட்டுச் சொல்லி இருந்தா அம்மா இவ்வளவு
கவலைப்பட்டு இருக்கமாட்டாங்க இல்லையா என நிலா அவளிடம் மெல்ல சொன்ன பொழுது,
நிலாவைப் பார்த்து நிரல்யாவும்,வெங்கட்டும் ஒரு சிரிப்புடன் “அவள்அப்படித்தான் “ என்று இருவரும்
ஓக்குரலில் கூறினார்கள் ….அது தான் நிலா எங்க அம்மா, அவளுடைய படபடப்பும் கவலை படுவதும்
அவளது இயல்பான குணம் …. நான் அலைப்பேசியில் பேசி இருந்தா மட்டும் கவலைப்படாம
இருப்பாங்கன்னு நினைக்கிறியா? எங்கமேல இருக்குற அன்பால எதுவும் நேரத்திற்கு முன்னால்
சரியாக இருக்கவேண்டும் என்ற ஒரு முன் ஜாக்கிரதை தன்மையால் தான் இப்படி இருக்காங்க….
அதை மாற்ற முடியாது… அதுதான் என் அம்மாவோட தனித்துவம்…. அதுவும் ஒரு அழகு அது தான்
எங்களுக்கும் அவளிடம் உள்ள ஈர்ப்பு ஒரு தனிப்பாலம். பெண் என்று பார்த்தால் தினம் தியாகம்
செய்யும் ஒரு உன்னத உயிரோவியம். தாய் என்று நினைத்தால் ஒரு பொக்கிஷம்.
சரண்யா சமையல் அறையில் இருந்து இதைக் கேட்டதும் தன்னை அறியாமல் கண் கலங்கினாள்.

எழுதியவர் : கே என் ராம் (14-Jun-23, 3:54 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 157

மேலே