ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் கவிஞர் இராஇரவி நூல் விமர்சனம் முனைவர் ச சந்திரா

ஹைக்கூ விருந்து
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 பக்கங்கள் 80 விலை ரூபாய் 80 *

கோபுர நுழைவாயில்

காலங்கள் மூன்று. அருஞ்சுவை கனி மூன்று. வாமனன் அளந்த அடி மூன்று. பாரதத்தை சூழ்ந்துள்ள கடல் மூன்று. மங்கல நாணில் இடப்படும் முடிச்சு மூன்று. தேசியக்கொடியின் வண்ணம் மூன்று. அக்காலம் முதல் இக்காலம் வரை மூன்று என்ற எண் முக்கியத்துவம் பெற்றிருக்க கவி. இரா. இரவி தன் எழுதுகோலை வைத்து சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கவிதையின் வரிகளும் மூன்று தான்.

புல்லாங்குழல் முதல் வீணை வரை, எருக்கம்பூ முதல் மல்லிகைப்பூ வரை, அய்யனார் முதல் ஆலகால விஷம் அருந்திய அகிலாண்டேஸ்வரர் வரை, மண்சுவர் முதல் அரண்மனை வரை, இராமன் முதல் இராவணன் வரை, எறும்பு முதல் யானை வரை, புதிரும் விடுகதையுமாய், கேள்விக்குறியும் ஆச்சரியமுமாய், படிமமும் குறியீடுமாய், சித்திரமும் விசித்திரமுமாய் ஹைக்கூ விருந்து என்னும் கவி. இரா. இரவி அவர்களுது நூல் சமூகத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்துள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

கற்பனையா? காவியமா?

உயர்திணையை விட்டுவிட்டு அஃறிணை, ஆத்திகம் விடுத்து நாத்திகம், ஆடம்பரம் விட்டு எளிமை, அசைவம் விட்டு சைவம், பொய்மை விட்டு உண்மை, அக்காலம் விடுத்து இக்காலம் என வித்தியாசமான கோணத்தில் கவி. இரவியின் எழுதுகோல், கோடாரியாய் அவதாரம் எடுத்த சமூகம் எனும் தோப்பில் உள்ள விஷ விருட்சங்களை வெட்டிச் சாய்க்கின்றது.

நதியோட்டம்

ஹைக்கூ விருந்து என்னும் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து விட்டு செல்கின்றன. தோட்டத்தில் மலரக்கூடிய மலர்களோ இடம் பெயர்ந்து இனம் புரியாமல் கவிஞரின் எழுதுகோலுக்குள் புகுந்து சொற்பூக்களாய் பூத்து குலுங்குகின்றன. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை கருவாக வைத்துக்கொண்டு, கவிஞர் ன்றே வரிகளில் மூடப்பழக்கவழக்கங்களை முறியடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நவரத்தினங்களில் முத்து

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரம் (ப.எண் 16)

சாட்டையடி ஹைக்கூ.

பெருமூச்சு விட்டாள்
தங்க கோபுரம் பார்த்து
முதிர்கன்னி (ப.எண் 18)

நெற்றியடி ஹைக்கூ.

காப்பியம் காவியம்
எல்லாம் ஒரே விலை
பழைய காகித வியாபாரி. (ப.எண் 50)

புதிர் ஹைக்கூ.

மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம் (ப.எண் 35)

குறியீட்டு ஹைக்கூ.

வேடந்தாங்கல் செல்லாத
தகரப்பறவை
விமானம் (ப.எண் 44)

முரண் ஹைக்கூ.

யாகம் நடந்தது
மழைக்காக
மரங்களை வெட்டி (ப.எண் 12)

மனமார ...

சங்க காலம் முதல் சக மனிதர்கள் வாழும் தற்காலம் வரையுள்ள சமூக சீர்கேடுகளை மூன்றே வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நச்சு மரங்களின் விழுதுகளையும் வேர்களையும் கவிஞர் இரா. இரவி தம் எழுத்தாணியை வைத்து தகர்த்து எறிந்துள்ளது. வியக்கத்தக்க ஒன்றே செந்தூர் முருகன் கரங்களில் திகழும் வைரவேல் போன்ற இவரது இலக்கியப்படைப்புகள் ஒளிரட்டும் என்று இணையதள நேயர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம் ..

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (12-Sep-23, 7:38 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே