நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால் ஒடியெறியத் தீரா பகை - பழமொழி நானூறு 387

நேரிசை வெண்பா

மறையா தினிதுரைத்தல் மாண்பொரு ளீதல்
அறையா னகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால்
ஒடியெறியத் தீரா பகை. 387

- பழமொழி நானூறு

பொருளுரை:

கருதியதை மறைத்து வைக்காது இனிமையாக எடுத்துக் கூறுதல், மாட்சிமை மிக்க பொருளைக் கொடுத்தல், வஞ்சனை முதலியவற்றால் கீழறுத்து அவரைச் சார்ந்தாரைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளல், முறையாக நடுநிலைமையிற் சென்று அப்பகைவர்களை அறச்செய்தல் ஆகிய இவையல்லாமல் தண்டம் ஒன்றுகொண்டே பகையை அறச்செய்ய அப்பகை தீர்தல் இல்லை.

அறை: Stratagem, wile, trick - வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11)

கருத்து:

பகைவரை நான்கு நெறியான் வயப்படுத்துக என்றது இது.

விளக்கம்:

'மறையா உரைத்தல்' என்றது மாறுகோடலால் தனக்கு உண்டாம் பயனையும் அவர்க்கு உண்டாம் தீமையையும் எடுத்துக்கூறி, மாறுகொள்ளாது இருத்தலே நன்று என்றல்,

மூன்று நெறியானும் செய்து நான்காம் நெறியைக் கைக்கொள்ளலின் முறையால் என்றார்.

செற்றம் பற்றிப் புறமுது கிடுவார் முதலியோரைக் கொல்லுதலின்றி வெல்க என்பார், 'நடுவணாக' என்றார்.

'ஒடியெறியத் தீரா பகை' என்றது நான்காம் நெறி ஒன்றையே கைக்கொண்டு எறிந்தொழிப்பின் அவன் செய்த முறையன்றிய செயலால், அந்நாட்டவர்க்கும் பிறர்க்கும் உளத்துப் பகைமை நீங்காதுளவாம் என்பது.

'ஒடியெறியத் தீரா பகை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-23, 9:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே