பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு - பழமொழி நானூறு 399
இன்னிசை வெண்பா
பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்(கு)
உரைத்தாலும் தோன்றா துணர்வு! 399
- பழமொழி நானூறு
பொருளுரை:
பூக்கள் பூத்திருந்தாலும் காய்க்கப் பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன.
வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்களும் மிக அதிகமாக உள்ளனர்.
எருவிட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள.
அவைபோல, அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.
பாதிரி: the trumpet-flower tree
கருத்து:
பேதைக்கு அறிவு ஊட்டுதல் இயலாது.
'பேதைக்கு உரைத்தாலும் தோன்றா துணர்வு' என்பது பழமொழி.