முயன்றிடடா வென்றிடடா
முயன்றிடடா! வென்றிடடா!
நதியென கடலென துணிவுடன் போரிட கற்றிடடா!
விதிதனை மதியுடன் அணுகிடக் கூடிடும் வெற்றியடா!
(நதியென)
எத்தனை சோதனை எத்தனை வேதனை எதிர்படினும்
எத்தனை ஊழ்வினை எத்தனை தீவினை படுத்திடினும்
நித்தமும் பீறிடும் நெஞ்சுரத் தால் இதை அகற்றிடணும்!
சத்திய பாதையில் வெற்றிகள் ஆயிரம் குவித்திடணும்!
(நதியென)
சிந்தனை மாறிட நிந்தனை கூறிடும் மனத்தவரும்
சந்ததம் போரிட சண்டையை ஏவிடும் குணத்தவரும்
உந்தனின் உயர்வினைக் கண்டிடும் போதினில் திருந்திடணும்!
வந்தனை கூறிட வந்திடும் வேளையில் வருந்திடணும்!
(நதியென)