ஒன்றுக்குள் ஒன்றாகும் ஒன்று
ஒன்றுமில்லை என்பவர்க்கு ஒன்றுமில்லை என்பார்
ஒன்றுமில்லை என்பதற்குள் ஒன்றுண்டு என்பார்
ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஓராயிரம் குற்றம்
உண்டாக்கு வார்க்கதிலே ஒன்றிருக்க வேண்டும்
ஒன்றுமின்றிப் போய்விட்ட ஒவ்வொருவ ருக்கும்
உயிர்வாழப் பசியென்று ஒன்றிருக்கும். அந்த
ஒன்றுக்காய்ப் போராடும் ஒவ்வொருநாள் வாழ்வை
ஒன்றுமில்லை என்றுரைத்து ஒதுங்கிவிட லேனோ.
***
ஒன்றுமற்றுப் போகின்ற ஒருவாழ்வுக் குள்ளே
ஒன்றிவிடும் ஆசைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
ஒன்றுமில்லை என்பததன் உள்ளர்த்தம் உன்முன்
ஒவ்வொன்றாய் விளங்குமொரு உண்மைதனைக் காண்பாய்
ஒன்றோடு ஒன்றொன்ற ஒன்றுவரும். அங்கே
ஒன்றிவரும் உறவுகளும் உபத்திரவ மாகும்
ஒன்றிரண்டு விதிவிலக்காய் உண்மையுள தாயும்
ஒன்றுக்கும் உதவாத ஒன்றாகிப் போகும்
***
ஒன்றுக்கு மாகாத ஒன்றான போதும்
ஒட்டுறவு இல்லையென ஒதுங்கிநிற்கும் பாரு
ஒன்றொன்றும் ஒருதிக்கில் உற்றுப்பார் கின்ற
ஒன்பதுகி ரகங்கள்போல்
உன்கண்கள் காணும்
ஒன்றுக்கும் அஞ்சாமல் ஒவ்வொன்று பேசி
ஒற்றுமைக்குப் பங்கத்தை உருவாக்கி வைக்கும்
ஒன்றென்ற ஒன்றைத்தான் ஒன்றாக்கி டாமல்
உன்பாட்டில் நீவாழ உண்டாகும் சாந்தி!
*