கடவுளிடம் ஒரு வேண்டுகோள்

அன்புள்ள கடவுளே (அல்லது) அடக் கடவுளே
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்! பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இன்று பெரும் ஆபத்தில் இருக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறோம். புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு பல கோடி மக்கள் அவதி படுகின்றனர். இடையில், கொரோனா வைரஸ் போன்ற பீதியை உருவாக்கி உயிர்களை கொல்லும் தொத்துவியாதியையும் சந்தித்துவிட்டு, ஏதோ கொஞ்ச காலம் சிறிது நிம்மதியாக வாழ்வோம் என்றால், இப்போது வேறு விதமான பிரச்சினைகள் மற்றும் அபாயங்கள்.
எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்தவராக இருப்பதாக கருதப்படுவதால் நான் இங்கு குறிப்பிடுவது உங்களுக்கு ஓரளவுக்காவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
செல்போன். ஆம். ஸ்மார்ட் செல்போன். இப்போது உலகுக்கு தாங்கமுடியாத பிரச்சினை இந்த ஸ்மார்ட் போனால் தான். இதன் உபயோகங்கள் நூறு என்றால் இதனால் ஒரு தனி மனிதனுக்கும் , அவர் குடும்பத்திற்கும் மற்றும் சமுதாயத்திற்கும் விளைகின்ற தீமைகள் ஆயிரம்.
பிறந்த குழந்தைக்குக்கூட விளையாடுவதற்கு இப்போது செல்போன்தான் தரப்படுகிறது. இரண்டு வயதாகிவிட்ட குழந்தைகளுக்கு உணவு கொடுக்க இப்போது, செல்போன் கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. ஒரு கணவனும் மனைவியும் ஒவ்வொரு செல்போன் வைத்திருக்கின்றனர். குழந்தைக்கு என்று மூன்றாவது செல்போன் ஒன்று வாங்கி கொடுக்கின்றனர் (கெடுக்கின்றனர்). இதனால் ஐந்து வயதான ஒரு குழந்தை, கார்ட்டூன் மட்டுமின்றி வேறு பல பார்க்கக்கூடாத விஷயங்களை பார்த்து புரிந்தோ புரியாமலோ தெரிந்துகொள்கிறது.
பத்து வயது ஆகிவிட்டால், ஒரு சிறுவன் சிறுமியால் செல்போன் இல்லாமல் இருக்கமுடிவதில்லை. பெற்றோர்களுக்கும் இதை வாங்கித்தந்தே ஆகவேண்டும் எனும் கட்டாய சூழல்கள். பத்து பன்னிரண்டு வயது சிறுவர்கள், பாலியலை தூண்டும் பல விஷயங்களை படங்கள் மூலம் தெரிந்துகொள்கின்றனர், இது மட்டும் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை கூட இவர்கள் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். பல வலைத்தளங்களின் மூலம் சிகரட் , மது மற்றும் போதை பொருட்களால் இவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் . பெற்றோர்களால் அவர்களது பிள்ளைகளை எவ்வளவு நேரம்தான் கட்டிக்காக்க முடியும் அல்லது கவனித்துக்கொண்டே இருக்க முடியும்? விளைவு, பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருகிறது, குழந்தைகள் செய்யும் குற்றங்கள் பெருகி வருகின்றன. குடும்பத்தில் அன்பும் பாசமும் குறைய துவங்கிவிட்டன. சிறு வயதிலேயே இவர்கள் தனிமையில் அதிக நேரம் செலவிடுகின்றனர் ( செல்போன் துணையுடன்தான்).

நிலையான நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளிலிருந்து நாங்கள் விலகிவிட்டோம். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். பாவம் செய்வதில் வரம்பு மீறிவிட்டோம். லஞ்சம் , ஊழல் இவையெல்லாம் எங்களது தினசரி பழக்கவழக்கங்கள் ஆகிவிட்டன, நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அடிமைகளை விட இயற்கையை துஷ்பிரயோகம் செய்து வருகிறோம். நாங்கள் அதை புரிந்துகொள்கிறோம். நாங்கள் புனிதமற்றவர்கள், கட்டுக்கடங்காதவர்கள், எங்களது நடத்தை முற்றிலும் முட்டாள்தனமானது. நாங்கள் இதையும் ஏற்கிறோம். சக மனிதர்களை வெட்டுவதற்கும், சுட்டுத்தள்ளுவதற்கும் கூட தயங்குவதில்லை. மனிதனின் மாமிசம் சாப்பிட்டால், வயிற்று பிரச்சினை மட்டும் அல்லது மனப்பிரச்சினையும் மூளை பிரச்னையும் வரும் என்று நம்புவதால், மனிதனை மட்டும் விட்டுவிட்டு வேறு எந்த ஜந்துவாக இருந்தாலும், சிறு துளி கூட குற்ற எண்ணம் இல்லாமல் வெட்டி , சமைத்து, சுவைத்து உண்கிறோம் . மிகவும் கேவலமான நிலைதான்.
நாங்கள் அன்பையும், இரக்கத்தையும் சிதைத்துள்ளோம். ஆமாம் , ஆமோதிக்கிறோம்.
ஆனால், நீங்கள் அன்பு மற்றும் கருணையின் உருவம் (அருவம்) . நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? சிறு அசைவு அல்லது செயல் கூட உமது அருளால் அல்லவா? இன்றைய உலகம், குழப்பம், சமத்துவமின்மை, அநீதி போன்றவற்றால் நிரம்பியுள்ளது. அதை ஒப்புக்கொள்கிறீர்களா?
நூற்றுக்கணக்கான துறவிகள், அவர்கள் உங்களை உணர்ந்ததாக எங்களிடம் மெய்யோ பொய்யோ கூறுகின்றனர். ஒரு சில நபர்களுக்கு இருபது, முப்பது மாடிகள் கொண்ட பேரரசு வீடுகள் உள்ளன; உயிர் போகும் தாகமும், பசியும் தினசரி பல கோடிக்கணக்கான ஏழைகளை காதலித்து கொண்டே இருக்கின்றன. ஒரு சில தேசங்கள் வளர்ச்சியடைந்து வசதியாக உள்ளன. மீதமுள்ளவை பொருளாதார வறுமையால் நசுக்கப்படுகின்றன.
பெண்களின் சமத்துவத்திற்காக உலகம் கூக்குரலிடுகிறது ஆனால் அவர்கள் இன்னும் மோசமாக அவமதிக்கப்படுகிறார்கள். மதங்கள், பிரிவுகள், மொழிகள், இனவெறி போன்ற கவர்ச்சி மற்றும் கூச்சல்களுக்கு மத்தியில் உண்மையான ஆன்மீகம் எப்போதும் கோமா நிலையில் உள்ளது.
கடவுளே, நீங்கள் இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் இருக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள். நீங்கள் எங்கள் இதயத்தில் இருந்திருந்தால், நாங்கள் இதயத்துடன் செயல்பட்டிருப்போம். நீங்கள் உலகின் அல்லது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில இருந்தால் உங்களின் முழு அஞ்சல் முகவரியை (மின்னஞ்சல் ஐடி மற்றும் செல்போன் எண் இருந்தால் அதையும் குறிப்பிடவும்) வழங்கவும். தயவு செய்து பயப்பட வேண்டாம். நாங்கள் அப்படி உங்கள் வீட்டிற்கு வர மாட்டோம் அல்லது உங்கள் தளத்தைத் தாக்க எந்த ராக்கெட்டையும் ஏவ மாட்டோம். உங்கள் முகவரியைக் கொடுத்தால், கடவுளுக்கும் ஒரு விலாசம் இருக்கிறது, அவருக்கும் அடையாளச் சான்று உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க உதவும். அதன் மூலம் கொஞ்ச நஞ்சமாவது உலகம் மாற, வாய்ப்பு இருக்கும். அட, ஒன்றும் முடியவில்லையா, பணத்தையோ அல்லது இந்த செல்போனை இவ்வுலகிலிருந்து ஒரேடியாக அழித்துவிடுங்கள்.
கடவுளே! நீங்கள் ஒரு வேளை இல்லை என்றாலோ, இந்த மனுவிற்கு பதிலளிக்க முடியவில்லை என்றாலோ, இந்த கருணை மனுவை புறக்கணிக்கவும்.

(இதயம்) பிரேக்கிங் நியூஸ்:
சற்று நேரத்திற்கு முன், கடவுள் தனது இருப்பை மட்டுமல்ல, நம்முடைய இருப்பையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jul-24, 4:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 148

மேலே