கோத்தாஸ்
பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில்
மக்களிடையே கடுமையான போட்டி
முக்கியமான எழுதப்படாத சட்டம் உலகத்
தமிழரிடையே நிலவுகிறது. தமிழ்ப்
பெயர்களைக் கண்டிப்பாகக்
குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. இதற்கு
விதிவிலக்காக சுமார் ஐந்து சதவீதம்
தமிழர்களே அவர்கள் பிள்ளைகளுக்குத்
தமிழ்ப் பெயர்களைச் சுட்டுகிறார்கள்.
சில பெற்றோர்களின் பெயர்கள் தூய
தமிழ்ப் பெயர்களாக இருக்கும். ஆனால்
அவர்கள் பிள்ளைகள் பெயர்கள்
பிறமொழிகளின் பெயர்களாகவே
இருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக
இந்தி, அல்லது சமஸ்கிருதப் பெயர்களாக
இருக்கும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு
மேல் பெயர்களில் புதுமையைப் புகுத்தும்
யுத்தியையும் தமிழ்ப் பெருங்குடி மக்கள்
செய்து வெற்றி கண்டு வருகிறார்கள்.
சமஸ்கிருதம் அல்லது இந்திப்
பெயர்களைப் போல் உள்ள பெயர்களை
உருவாக்கி அதை அவர்கள்
குழந்தைகளுக்குச் சூட்டிப் பெருமிதம்
கொள்கிறார்கள். இதுதான் இன்றைய
நாகரிகம்.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட
இலட்சக்கணக்கான மக்கள் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் பல
தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் யாருமே தங்கள்
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச்
சூட்டுவதில்லை. அவர்களுக்கு இருக்கும்
தன்மானமும் தாய்மொழிப் பற்றும்
பெரும்பாலான தமிழர்களிடம்
காணமுடியாத உண்மை.
நிற்க. நகர்ப் பகுதியில் ஆட்டோவில்
செல்லும் போது ஒரு கடையின் பெயர்ப்
பலகையில் நான் கண்ட பெயர்
'கோத்தாஸ் ....... .......'.
இந்தப் பெயர் தமிழில்
எழுதப்பட்டிருந்தது. 'தாஸ்' நமக்கு
அறிமுகமான பெயர். அது தமிழில்
'தாசன்' ஆகிவிடுகிறது. 'கோத்' என்றால்
என்னவென்று தெரியவில்லை.
'கோத்தாஸ்' பிரித்து எழுதமுடியாது ஒரே
பெயரா என்றும் தெரியவில்லை.
கண்டறிந்தால் இந்தக் கட்டுரையின்
கீழே தருகிறேன்.