நட்பின் கதை

நட்பின் கதை

நானும் என் மனைவியும் மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த வேளையில் நடந்த ஒரு உண்மை சம்பவம்,எங்கள் இருவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. அதை பற்றி நினைக்கையில் நட்பு என்பது யாருக்கும் எப்பொழுதும் எங்கிருந்தும் வரலாம் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
காலையில் இருவரும் இரண்டு மைல் நடப்பது ஒரு பதிவு. மூன்று அல்லது ஐந்து கிலோமீட்டர் நடந்து விட்டால் முருகன் இட்லி கடையிலோ,காமாட்சி மெஸ்ஸிலோ காலை சிற்றுண்டியை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தோம்.கையில் என்றும் ஒரு மஞ்சள் பையை வைத்து கொண்டு செல்வோம் இது காலையில் காய்கறிகளை வாங்கவோ அல்லது சிற்றுண்டிகளை எடுத்து வருவதற்கோ உதவும். ஒரு நாள் அவ்வாறு நடந்து செல்கையில் ஒரு நாய் எங்களை தொடர்ந்து வந்தது.அது நாங்கள் கையில் எதோ சாப்பிட வைத்திருக்கிறோம் என்ற நினைப்புடன் வந்தது.
நாங்கள் அந்த நாய் செய்கிறதை பார்த்துக்கொண்டே அந்த தெருவில் இருந்த தட்டேந்தி கடையில் காலை சிற்றுண்டியாக எதாவது சாப்பிட லாம் என்று நின்றோம்
அது எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு எங்காவது சாப்பிட கிடைக்குமா என்ற ஏக்கத்திலிருந்தது. அந்த தெரு நாய் அதுஎப்பொழுதும் படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதை பார்த்து உர் உர் ….என உறுமி இது என் இடம் என்று தன் எதிர்ப்பை காண்பித்தது.
இதனை கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த குட்டி நாய் வாலை பின் கால்களுக்கிடையில் நுழைத்து வளைந்து குலைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும் போது கூட ஓரக்கண்ணால் அந்த நாய் எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ ? என பயந்து பயந்து நகர்ந்தது. குட்டி நாய் தன்னைக் கண்டு மிரண்டு சென்றதை பெரிய வெற்றியாக கருதிய இந்த நாய் தன் இடத்தை முகர்ந்து ஒரு பெரிய “சாம்ராஜ்யத்தையே” வளைத்து விட்ட திருப்தியுடன் தனது உடலை வளைத்து படுத்தது. பசியினால் கண்களை மூடிக் கனவு காண ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு சத்தம் கேட்க “விருட்டென்று” நிமிர்ந்து பார்த்தது, பாதையின் அந்தப்புறம் இருந்த வீட்டிலிருந்து “இங்கே எல்லாம் ஒண்ணும் கிடையாது போம்மா” என்ற விரட்டலும் பசிக்கு ஏதாச்சும் போடுங்க சாமி” அந்த பெண்ணின் இரங்கல் குரலும் கேட்டன. “போம்மா போம்மா ” என்ற வீட்டுக்காரனின் அதட்டலால் அந்த பெண் முணுமுணுத்தவாறு அடுத்த வீட்டுக்கு செல்வதை பார்த்தது.
இந்த காலனியில் இருக்கும் வீட்டுக்காரர்களைப் பற்றி இந்த பெண்ணுக்கு தெரியாது போலும், என்று நினைத்துக் கொண்ட அந்த நாய் மீண்டும் தன் கண்களை மூடி கனவினை தொடர்ந்தது. ஐந்து நிமிடங்கள் ஒடியிருக்கும், அந்தப் பெண் முணுமுணுத்தவாறு தன்னைக் கடந்து செல்வதை கழுத்தை தரையோடு வைத்து கண்களை மட்டும் விரித்து பார்த்தது. அந்த பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கலாம், எண்ணெயே காணாத தலை, கையில் ஒரு துணி மூட்டையை வைத்திருந்தாள். அதனுள் என்ன வைத்திருப்பாளோ? அப்படி ஒரு இறுக்கத்துடன் அந்த மூட்டையை பிடித்திருந்தாள். மூக்கை சற்று நிமிர்த்தி அந்த மூட்டைக்குள் தான் சாப்பிட தகுந்த ஏதாவது வைத்திருப்பாளா? என முகர்ந்து பார்த்தது. அந்த மூக்கின் வழி சட்டென்று ஒரு மணம் உள்ளே நுழைந்தது. விரைவாக எழுந்து அந்த பெண்ணைத் தொடர ஆரம்பித்தது.
ஏதோ புலம்பியவாறு நடந்து கொண்டிருந்த அந்த பெண் தன்னை தொடர்ந்து வரும் இந்த நாயை “ஏய் போ போ” விரட்டி, அந்த வீட்டுக்காரன் மேல் இருந்த கோபத்தை காண்பித்துக் கொண்டாள். இது மாதிரி எத்தனை விரட்டுதலை இந்த நாய் எத்தனை பேரிடம் பார்த்திருக்கும். அதற்கெல்லாம் அஞ்சாமல் அந்த பெண் கையில் வைத்திருந்த மூட்டையை பார்த்து மூக்கை துருத்தி காண்பித்தது. அந்த பெண் மூட்டையை இன்னும் இறுக்கிக் கொண்டாள். நாலைந்து தெருக்கள் சுற்றி விட்டார்கள். அந்த பெண்ணும் கூடவே அந்த மூட்டையை குறி வைத்து வந்த நாயும்.
இரண்டு இடங்களில் கிடைத்த பழைய சாதத்தை அந்த பெண் இதற்கும் பங்கு பிரித்து கொடுத்தாள். முதலில் தேவையில்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்ட நாய் இவள் அரக்க பரக்க சாப்பிடுவதை பார்த்து மெல்ல மூக்கை அதன் மேல் வைத்தது. அதற்கு பிடித்த வாசம் மூக்கில் ஏற, அதன் பின் அதுவும் வேகமாக காலி செய்ய ஆரம்பித்தது. சாப்பிட்டு விட்டு அவள் உட்காருவாள் என எதிர்பார்த்தது. அவளோ மீண்டும் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விட்டாள்.
நாய் தயங்கியது. அங்கு வேறு இரண்டு நாய்கள் அந்த தெருவுக்கு ராஜாவாக இருந்தது. வீணான பிரச்சினைகளை சந்திக்க விரும்பாததால் அந்த பெண்ணை அடுத்த தெருவில் சந்திப்பது என முடிவு செய்து விட்டது.மீண்டும் இருவரும் சந்தித்து கொண்டபோது நடுப்பகல் கடந்து விட்டது. அந்தப் பெண் மூடியிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாய் மெல்ல அவளிடம் நெருங்கி வாலை ஆட்டி நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று தெரிவித்தது. அவள் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இதனை படுக்க சொல்லி சைகை செய்தாள். இவள் சைகையை புரிந்து கொண்டது போல மெல்ல அவள் உடலை உரசி படுத்துக் கொண்டு தலையை நிமிர்த்தி எனக்கும் ஒரு எஜமான் உண்டு என்பது போல பார்த்தது.இப்பொழுது மூட்டையில் இருந்து வந்த அந்த வாசம் அதற்கு அறிமுகமானது போல இருந்தது. ஆனால் அது என்னவென்று பிடிபடாமல் இருந்தது. அடிக்கடி “டீ கடை வாசலில் நிற்கும்போது இந்த வாசம் வந்ததாக நினைவு.வந்தது. மெதுவாக அந்த மூட்டையின் மேல் தன் மூக்கை வைத்து மூச்சை இழுத்து பார்த்தது.
ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். அந்த பெண் எழுந்து திடீரென்று விரு விருவென நடக்க ஆரம்பித்து விட்டாள். இதற்கு ஒன்றும் புரியவில்லை. அவளை தொடர்ந்து செல்வதா இல்லை இங்கேயே இருந்து விடலாமா என்று தயங்கியது. அந்த மூட்டைக்குள் இருந்து வந்த வாசம் அதன் நினைவுகளில் வர அதுவும் எழுந்து அந்த பெண்ணின் பின்னால் நடக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு ஆள் இவளை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான் இந்த பெண் அவன் அருகில் சென்று ஏதோ சொல்ல என்ன பேசுகிறார்கள் என்று இதற்கு புரியவில்லை. இருந்தாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பது போல அந்த பெண்ணை உரசி நின்று கொண்டு அவனை தலையை உயர்த்தி பார்த்தது. அவனுக்கும் தன் அன்பை தெரிவிக்க தன் வாலை மெல்ல ஆட்டி காண்பித்தது.
இப்பொழுது அந்த பெண்ணுடன் ஆணும் இணைந்து நடந்ததால் இந்த நாய்க்கு கொஞ்சம் கோபம் வந்தது. திடீரென்று வந்த இந்த நட்பால் தான் ஒதுக்கப்பட்டதாகக் கருதியது. வாலை நிமிர்த்தி வைத்துக்கொண்டு விராப்புடன் அவர்கள் கூடவே அதுவும் நடந்தது. அவன் ஏதோ இதை பார்த்து சொல்ல அவள் “கெக்கலி” என்று சிரித்ததைக்கண்டு “ தன்னை பற்றித்தான் பேசிச் சிரிக்கிறார்கள் என நினைத்து தன் கோபத்தை காட்ட உர்… என உறுமி காட்டியது.
இது உறுமியவுடன் அவன் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி கீழே குனிந்தான். அவன் கீழே குனிந்ததைப் பார்த்த நாய் கல்லை தூக்குவதாக நினைத்து அவனை பார்த்து மீண்டும் உறுமியது. அவன் நிமிர்ந்து அந்த பெண்ணை பார்த்து ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் குனிய அந்த நாய் அவன் தன்னை தாக்கிவிடுவானோ என்ற பயத்தில் குலைக்க ஆரம்பித்து விட்டது. அவன் உண்மையிலேயே கல்லை எடுத்து விட்டான்.

அந்த பெண் அவன் கையை பிடித்து ஏதோ சொல்ல அவன் கோபமாய் அதற்கு பதில் சொன்னான். இப்பொழுது இதற்கும் கோபம் வர ஆரம்பித்து விட்டது.அதற்கு காரணம் அந்த பெண்ணிடம் அவன் அதீத நட்பாய் இருப்பது அதற்கு பிடிக்கவில்லை. ஆனால் கோபத்தை காட்ட குரைக்க ஆரம்பித்தால் அவன் கல்லை எடுத்து தன்னை தாக்குவான் என்று உணர்ந்து துக்கம் தாளாமல் அவனை பார்த்து ஊளையிட ஆரம்பித்து விட்டது.
அந்த பெண் நாயை சாமாதானப் படுத்துவது போல கூப்பிட்டாள். இதற்கு அருகில் போக ஆசையிருந்தாலும் அவன் கையில் கல் இருந்ததால் பயந்து அங்கேயே நின்று ஊளையிட்டது. அந்த பெண், நாயை சமாதானப்படுத்த மெல்ல மூட்டையை பிரித்து ஒரு பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த “வடையை” எடுத்து அதனை நோக்கி வீசினாள். இவ்வளவு நேரம் தனக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த அந்த பொருள் தன்னை நோக்கி வருவதை பார்த்த நாய் வேகமாக அதனை கவ்வ எத்தனிக்க, அப்பொழுது எங்கிருந்தோ வந்த மற்றொரு நாய் அந்த வடையை தானும் கவ்விபிடிக்க பாய்ந்து வந்தது.
இந்த நாயிற்கு எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ தெரியவில்லை, அந்த வடையை ஒரே “கவ்வாய்” கவ்விக்கொண்டு தலை தெறிக்க ஓட ஆரம்பித்து விட்டது. அந்த பெண்ணும், ஆணும் விழுந்து விழுந்து சிரிப்பதை கூட கவனிக்கவில்லை.
அதனுடைய இடத்துக்கு வந்த பொழுது மீண்டும் அந்த குட்டி நாய் அந்த இடத்தில் படுத்து கிடந்தது. இந்த நாய் வந்தவுடன் மெல்ல எழ முயற்சிக்க, அந்த நாய் அதனை சட்டை செய்யாமல் தள்ளிப் போய் படுத்துக்கொண்டு கண்ணை மூடியவுடன் காலையில் இருந்து மாலை வரை அந்த பெண்ணோடு தான் நடந்தது அவளை தனது எஜமானியாக எண்ணி தனக்கும் ஒரு புகலிடம் உள்ளது என நினைத்தெல்லாம் மீண்டும் ஒரு முறை வந்திட அவர்களுக்குள் இருந்த அந்த பிணைப்பின் நடுவே அந்த மனிதன் வந்தது தன்னை அந்த பெண் கவனிக்காமல் அலட்சியம் செய்தது அவளை விட்டு தான் மீண்டும் தெரு நாயாக வீதியில் கிடப்பது யாவையும் அதற்கு ஒரு துக்கத்தை அளித்தது. அந்த குட்டி நாயை மெல்ல கண்ணை திறந்து பார்த்து இது எனக்கு நண்பன் நானும் இதுவும் இனி இங்கேயே உறங்குவோம் என உறுதி எடுத்து கண் மூடி கனவுக்கு சென்றது.
நாயை நண்பனாகவும் குடும்பத்தில் ஒருவனாகவும் கருதும் மக்கள் பலர் இவ்வுலகில் இருக்க அனாதையாக பல தெரு நாய்கள் அலைவதையும் பார்க்க முடிகிறது.
நம்மால் முடிந்த வரை அவைகளுக்கு அடைக்கலம் அளிப்போமாக.

எழுதியவர் : கே என் ராம் (10-Aug-24, 5:57 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : natpin kathai
பார்வை : 81

மேலே