உண்மையான ஞானம்
உண்மையான ஞானம்
என் பெயர் சங்கரராமன். என் அப்பா கேரளாவில் ஒரு கிராம முன்சீப். நான் பிறந்து வளர்த்தது
எல்லாம் இந்த கிராமத்தில் தான்.
இந்த கிராமத்தின் பெயர் தாராக்காடு.அழகான இந்த கிரமத்தில் பலரும் விவசாயம்
செய்பவர்கள்.என்னுடைய அப்பா அங்கு ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டி அங்குள்ள எல்லா
பிள்ளைகளுக்கும் கல்வி படிக்க வழி அமைத்தார். அவர்கள் நல்ல முறையில் இந்த உலகில்
வாழவேண்டும் என்ற ஒரு மிக நல்ல எண்ணத்தில் தொடங்கிய இந்த பள்ளிக்கூடத்தில் ஒரு
ஆசிரியரையும் ஆசிரியையும் அமர்த்தி அதன் நிர்வாகத்தை என் அம்மாவிடம் கொடுத்திருந்தார்.
இந்த பள்ளிக்கூடத்தில் எல்லோரும் சேரலாம்.படிப்பிற்கும் இறை வழிபாட்டுக்கும் முக்கியத்துவம்
அளித்து மாணவர்களுக்கு நல்ல பண்பையும்,அறிவு முதிர்ச்சியையும், பெற்றவரையும் மற்றவரையும்
மதிப்பதைப் பற்றியும் பல வழிகளில் போதித்து மாணவர்களின் வளச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி
வந்தனர். சில வருடங்களில் இந்த பள்ளி எந்த விளம்பரமும் இல்லாமல் பெரிய அளவில் புகழ்
அடைந்தது. பள்ளியின் பெயர் சொன்னவுடனே ஓ அந்த பள்ளியிலா படிக்கிறாய் என்று கேட்கும்
அளவிற்கு மதிப்பைப் பெற்றது. என் அப்பாவும் அம்மாவும் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த
பள்ளிக்கூடத்தின் வளர்ச்சியைக் கண்டு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் அளித்து அதில் படித்து
முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு அரசாங்க கல்லூரிகளில் மேற்படிப்புக்கு வழி அமைத்து
கொடுத்தது. ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அங்கு படிப்பை கற்றுக்கொடுக்க நாட்டின் எல்லா
இடங்களில் இருந்தும் விண்ணப்பித்தனர்.அந்த பள்ளியால் தாராகாட்டிற்கு பெயரும் புகழும்
வளர்த்தது. அந்த கிராமத்தை பற்றிய செய்திகளும் இணையதளம் மூலம் பரவியது. அந்த
பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் எவ்வாறு படிப்பினால் அகங்காரம் கொண்ட மாணவனை
நல்ல வழிபடுத்தியது என்பதை காண்போம்.இந்த நிகழ்ச்சியை நான் செல்லும் இடமெல்லாம் சொல்லி
என்னையும் அகந்தையில் இருந்து காப்பாற்றிக் கொள்வேன். அந்த பள்ளிக்கூடத்தில் கல்வி
கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகச் சிரத்தையுடன் மாணவர்களுக்கு கல்வியை கற்பித்தார்.அவரிடம் பல
மாணவர்கள் பயின்றனர். பயின்ற அனைவரும் புத்திசாலைகளாகவும் நல்ல அறிவாளிகளாகவும்
இருந்தனர். ஆகவே அவர்களுக்குள் போட்டியும் ஒருவனுக்கு மற்றவன் சளைத்தவனல்ல என்ற
மனப்பான்மையும் இருந்தது. இதனால் ஆசிரியர் வகுப்பிற்கு வருவதற்கு முன் தானே பாடத்தை
நன்றாக படித்துவிட்டு பாடம் நடத்த வகுப்பிற்கு வருவார். அவர்கள் கேட்கும் கேள்விகளைச்
சிந்தித்து அதற்குரிய பதில்களை அளிக்க அறிவுக்கூர்மையும் வேண்டிவந்தது. இந்த வகுப்பில் உள்ள
மாணவர்களில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத
ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு பள்ளிக்கூடம் வந்து
சக மாணவர்களைக்கு சவால் விடுத்து அவர்களால் முடியாமல் போனவுடன் அதற்கான பதிலையும்
அவனே கடைசியில் அளித்துவிட்டு விளங்குவான் . இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும்
அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .
ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்
சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.
அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை
விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில்
மூத்த மாணவர்களிடம் கடினமாகக்கேள்வி கேட்டு, அவர்கள் விடை
தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள்
அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.
ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த
அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார்.
ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.
அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக
அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில்
அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும்.
வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார்.
"மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என்
நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.அவர் தர்க்க சாஸ்திரத்தைக் கரைத்துக்குடித்தவர். இரு நூறுக்கு
மேற்பட்ட நூல்களை எழுதியவர்.பல முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப்
பெற்றவர் .பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் பலர் இருக்கின்றனர். நீ போய்
பக்கத்துத்தெருவிலுள்ள மரத் தச்சு ஆசாரியிடம் போய்
விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியைச் செய்து வைக்கச் சொல் .
இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத்தேவைப் படுகிறது. "இந்த பொறுப்பான வேலையை உன்னால்
மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் .
கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி
விட்டன.
''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.
ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு
தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை
சொன்னான்.
ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.
அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்குடித்தவர். இரு நூறுக்கு
மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப்
பெற்றவர். பல அயல்நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் இருக்கின்றனர்.அவன் சொல்லி
முடிப்பதற்குள் ஆசாரி மிகச் சூடாகி விட்டார். கோபத்தோடு "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க
நான்தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம
வேறென்னமோ உளர்றிகொண்டிருக்கையே ! உனக்கு அறிவு இருக்கா நீபடிச்சவன் தானா ? "
என்றார்.
இந்தக் கேள்வி மாணவனை ஆத்திரமூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு விவரம் சொல்லியும்
உனக்குப் புரியலைன்னா நீதான் ஒரு வடிகட்டின அடி முட்டாள் " என்றான்.
ஆசாரி "அடேய் அறிவு கெட்டவனே ! என்னதான் படிச்சிருந்தாலும்,
விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயரமும் ,
அகலமும்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான்.
உனக்குப்பெட்டி வேணுமானா மரியாதையா அங்கு போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.
எங்கிருந்தோ அவன் மண்டையில் பளீரென்று அடி விழுந்தது.
"மனித அறிவெல்லாம் இவ்வளவுதானா ? இதுக்காகவா நான் என்னை அறிவு ஜீவியாக பெருமிதம்
கொண்டு இத்தனை பேரை ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்தினேன் ? "
அவனுக்கு மனதிற்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையும்
அவமானமும் பொங்கி தலையை குனிய வைத்தது அந்த படிப்பறிவில்லாதவன் என்று நினைத்த மர
ஆசாரியின் முன்னால் நிற்க கூட முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் .
ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி
அடிச்சாச்சா " .
அவன் பதில் சொன்னான்.
"அடிச்சாச்சு. ஐயா என்னோட தலைகனத்துக்கும் அகந்தைக்கும் ".
ஆசிரியர் சொன்னார்:
என் செல்லமே ! என்னதான் நீ படித்தாலும் இது அழியப் போகிற சரீரம் தான்.இதை உணர்ந்து
தாழ்மையுடனும் அடக்கமாகவும் நடப்பதே உண்மையான ஞானம் என்று கூறிட அவர் கால்களில்
விழுந்தான்.