வேண்டுவன வேண்டுமென கேட்டேன்

பாய்ந்திடும் நதிகள் சேர்ந்திட வேண்டும்
பஞ்சம் பாரினில் ஓடிட வேண்டும்

பிஞ்சு மனங்களில் குணம்சேர வேண்டும்
நெஞ்சில் நிறைந்திடும் அன்பது வேண்டும்

கொங்கை மாந்தர்க்கு கற்புநெறி வேண்டும்
கொடும்புலி எதிர்த்திடும் வீரமும் வேண்டும்

கொடுங்கோல் ஆட்சிகள் முடியுற வேண்டும்
கொடுமைகள் தகர்த்திடும் ஆண்மையும் வேண்டும்

தன்னலம் கருதா உள்ளமும் வேண்டும்
தாய்மடி ஒருநாள் துயிலவும் வேண்டும்

தர்மம் தழைத்தோங்கும் ஊரது வேண்டும்
தனிக்குடில் அமைத்து குடியேற வேண்டும்

தருவாய் என்கிற நம்பிக்கை வேண்டும்
தலைவா! இதைநீ தந்திட வேண்டும்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (6-Sep-24, 10:20 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 33

மேலே