வாழ்வை காப்பாயே

வாழ்வை காப்பாயே..!
08 / 04 / 2025
கண்ணாடி இழைகளால்
வானுக்கும் மண்ணுக்கும்
தற்காலிக வலை பின்னும்
ஏ..மழையே
பல சமயம் நீ
மண்ணை மறப்பது ஏனோ?
சாரல் மழையாய்
சில சமயம்
எங்கள் உடல் வருடி
குளிரூட்டுகிறாய்
வான் பிளந்து
புயல் காற்றோடு
பேய்மழையாய்
பலசமயம்
எங்களை கண்ணீரில்
குளிப்பாட்டுகிறாய்.
வருவதோ சிலநாட்கள்தான்
உனக்காய் ஏங்கி மண்ணும்
வெடித்து கிடக்கிறதே
சூல் கொண்டமேகம்
மேல் பட்ட காற்றால்
கொட்டித் தீர்கிறதே
வெடித்த பலூனாய்...
கண் கூசும் மின்னலையும்
காதடைக்கும் இடியையும்
எங்கு மறைத்து வைத்திருந்தாயோ!
உன் ருத்ர தாண்டவத்திற்கு
ஊழிக்காற்றும் மின்னலும்
பேரிடியும் பக்கவாத்திய காரர்கள்!
நீ ஆடி முடிந்தவுடன்
ஓர் பேரமைதி
ஏற்படுமே - அந்த
ஈர சிலிர்ப்பை
அனுபவிக்காது போகும்
வாழ்வும் ஒரு வாழ்வா?
உன் ஒரு துளி பட்டவுடன்
உடல் சிலிர்த்து
உயிர் துளிர்க்கிறதே.
உன் கண்ணீரால்
எங்கள் தண்ணீர்
தாகம் தீர்கிறதே!!
ஐம்பூதங்களில்
ஒரு பூதம் நீ
உனை வணங்குகிறோம்.
ஒரேயொரு வேண்டுகோள்
தக்க சமயத்தில்
அளவோடு பெய்து
எங்கள் விவசாயிகளின்
வாழ்வை காப்பாயே..!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Apr-25, 7:39 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 33

மேலே