பார்வைகள் அல்லது வாசிப்பு

பார்வைகள் அல்லது வாசிப்பு

இந்த கட்டுரை ஒரு படைப்பாளியை கீழ்நோக்கி இழுப்பதாக கருத வேண்டாம். இந்த ‘கட்டுரை’ என்பது சந்திக்கும் சவால்களை பற்றி சொல்வது மட்டுமே, அதனால் இந்த கட்டுரை வாசிக்கும் படைப்பாளிகள், வாசகர்கள் இன்னும் இன்னும் என்னும் சொல்லும் வண்ணம், ஏதேனும் படைப்புக்களை படைக்க முயற்சிக்க வேண்டும்.
பார்வைகள், அல்லது வாசிப்பு என்பது பல்வேறு வித்தியாசங்கள் கொண்டது. ஒருவருக்கு தோன்றும் பார்வைகள் மற்றவருக்கு வேறு விதமாக தோன்றலாம். இது மனித வாழ்க்கையில் அல்லது சமூகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிய முடியும்.
இந்த கட்டுரை சொல்ல வருவது என்னவென்றால் இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் எப்படி பொது வெளியில் காண்பிக்கபடுகிறது என்று வாசகர்களிடம், அல்லது படைப்புலகத்தை கையில் வைத்திருக்கும் ஊடக, பத்திரிக்கை உரிமையாளர்களிடம் காணப்படுகிறது என்பதை குறிப்பிடுவதாகும்.
இலக்கியம் என்பதையே இவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்களோ? என்றுதான் தோன்றுகிறது. உயர்தர இலக்கியம், அதற்கு சற்று குறைவான இலக்கியம், மிகுந்த கீழான இலக்கியம் என்று வைத்து கொண்டிருப்பார்களோ என்று தெரியவில்லை. படைப்பவர்கள் படைத்த கவிதை கதைகள், கட்டுரைகள், இவைகளை வெளியிடும் ஊடகம் அல்லது பத்திரிக்கைகளில் ஒரு வரைமுறை வைத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறொன்றுமில்லை, காரணம் அவர்கள் பத்திரிக்கை நடத்த வேண்டும், அதை நம்பி பல்வேறு தொழிலாளர்களின் குடும்பங்கள் இருக்கின்றன.
என்றாலும் படைப்புக்களின் ‘மேல் இலக்கியம்’ என்று ‘கீழ் இலக்கியம்’ என்று எப்படி பிரித்து வைக்கிறார்களோ? என்று தோன்றுகிறது. இதில் சாதி, மதம், இனம், சாதிக்குள் இந்த அந்த கூட்டம், என பிரித்து, அது சம்பந்தபட்ட இலக்கியம் என்று பெயரை வைத்து பிரித்து விடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் அந்த படைப்புக்கள் சில நேரம் எல்லா இலக்கிய படைப்புக்களை விட மிக பிரமாதமாக இருக்கும். ஆனால் இரசிக்கும் மன நிலை வேண்டுமே? வாசகர்கள் கூட நிறைய இடங்களில் எல்லா இலக்கியங்களையும் வாசிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் அதை வெளியிடும் இத்தகைய மனப்போக்கு கொண்ட உரிமையாளர்களிடம் அந்த மன நிலை குறைவாகத்தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
அதற்கான காரணத்தை இப்படியும் ஊகிக்க முடியும், எங்களது பத்திரிக்கையை இந்த மக்கள்தான் அதிகமாக வாசிக்கிறவர்கள், என்னும் வரைமுறையை வைத்து கொண்டு அவர்களை திருப்தி படுத்தத்தான் பத்திரிக்கையே நடத்துகிறோம் எனும் போது நாங்கள் அப்படிப்பட்ட இலக்கிய படைப்புக்களை நிராகரிப்பதை எப்படி தவறென்று சொல்ல முடியும்? இப்படி அவர்களிடம் இருந்து கேள்வி எழலாம்.
அதே நேரத்தில் மிகப்பெரும் புண்ணியத்தை கட்டி கொண்டது என்னவோ, நிறைய வலைத்தளங்களும், அவரவர்களின் தனிப்பட்ட வெப் சைட்டுக்களும் தான்.
இன்று ஒரு எழுத்தாளன் படைக்க விரும்பும் எதை வேண்டுமானாலும் இந்த வலைத்தளங்களின் மூலமாக வெளிப்படுத்தி தன்னுடைய இலக்கிய அறிவை உலகுக்க காட்ட முடிகிறது. இது படைப்பாளிகளுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிராசாதம். அது மட்டுமல்ல நான் படைப்பது ‘இப்படிபட்ட இலக்கியம்’ என்று எந்த உரிமையாளர்களாலும் பிரித்து பார்க்காமல் நேரடியாக வாசகனிடம் போய் சேர்ந்து விடுகிறதே, அதை விட படைப்பவனுக்கு என்ன வேண்டும்.
இருந்தும் ஒரு சந்தேகம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது, எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவை புகழ்பெற்றவையா, என்பதை “அச்சில் வரும் நூலை கொண்டுதான் முடிவு செய்கிறார்களோ? என்பதுதான்.
அரசு அல்லது தனியார் எதுவாக இருக்கட்டும் அவர்கள் நடத்தும், இலக்கிய பரிகளை தருவது, அதை ‘பரிசுக்குரிய நூல்’ என்று அகாதமிகளுக்கு அனுப்புவது எல்லாமே நூலாக்கத்தின் மூலம் படைக்கப்பட்டதையே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளுகிறதோ?
இன்று வலைத்தளங்களை விட முகநூலில் எழுதும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்றாகத்தான் இருக்கிறது, என்றாலும் அவைகள் குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டும், நகர்ந்து சென்று அத்தோடு மறைந்தும் போய் விடுகிறது.
வலைத்தளங்களிலாவது அவர்களின் படைப்புக்களின் படைப்பாளர்களின் இருப்பில் போய் உட்கார்ந்து எப்பொழுதாவது ஒரு சிலரின் பார்வையில் பட்டு வாசிக்க முடிகிறது. அது மட்டுமல்ல வலைத்தளங்களில் வெளியிடப்படும் எந்த ஒரு இலக்கிய படைப்புக்களும் உடனடியாக உலகம் முழுக்க நொடியில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. இதை விட படைப்பவனுக்கு என்ன வேண்டும்? அவனுடைய எண்ணங்களுக்கு வாசகனிடம் இருந்து அது உலகின் எந்த மூலையிலிருந்தும் படைப்பை பற்றிய கருத்து கிடைத்து விடுகிறது. இதற்கு மேல், படைப்பாளிக்கு என்ன தேவை?
இன்று பதிப்பகங்கள் ஏராளமாய் இருக்கின்றன, அவைகள் படைப்பாளர்களின் ஏராளமான படைப்புக்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. வாசகர்களும் நூல்களை வாங்கி வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் தங்களால் முடிந்த வரை வாசிப்பை ஊக்கப்படுத்த மாவட்ட தலைநகரங்கள், மற்றும் நகரங்கள், போண்றவைகளில் புத்தக திருவிழாக்களை நடத்தி வாசகர்களை வரவழைத்து வாசிப்பை ஊக்கப்படுத்துகின்றன. இவைகள் எல்லாமே இலக்கிய உலகிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சேவையாகும்.
அதை விட வாசிப்பு என்பதை வாசகர்களிடமிருந்து தட்டி பறிக்க எண்ணற்ற சாதனங்களும் வரிந்து கட்டி கொண்டு நிற்கின்றன. செல்போன் அதற்கென்றே உருவான கருவியாய் வாசகர்களின் சட்டைப்பையில் எப்பொழுதும் தன்னை இருத்தி கொண்டுள்ளது.
அதனால் ‘வாசிப்பு’ என்பதை வாசகனிடம் கொண்டு வரும் வேலையை படைப்பாளி செய்ய முற்படுகிறான். அதே நேரத்தில் அதை வெளியிடும் வாய்ப்பை ஊடகம் அல்லது பத்திரிக்கையில் எதிர்பார்த்து, கடைசியில் வலை தளத்தில் வெளியிடுகிறான். அது அவனுக்கு நல்ல பலனை, உலகம் முழுக்க இருக்கும் வாசகர்களின் பதிலில் இருந்து கிடைக்கிறது. என்றாலும் உள்ளத்தில் அவனுக்கு இதை பற்றிய திருப்தி இருக்கிறதா என்று தெரியவில்லை.
இத்தனை போராட்டங்களையும் தாண்டி அவனது படைப்புக்கள் பத்திரிக்கையிலோ அல்லது வலைதளங்களிலோ வெளியிடப்பட்டு அவனுக்கு நல்ல பேரை பெற்று தருவதாயிருந்தால் அது படைப்புலக இலக்கியத்திற்கு பெருமைதானே.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Apr-25, 11:10 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 34

மேலே