படைவீரர்களின் சிறப்பும் குடும்பத்தினர்களின் ஈகமும்
தன்னுயிர் துச்சம் எனஎண்ணி
மண்ணுயிர் காப்பவன் படைவீரன்
அயலவர் அருகினில் நெருங்குகையில்
புயலென பாயும் பெரும்தீரன்
எதிரிகள் தாக்கிட வரும்போது
எரிமலை போல்பொங்கி எழுந்திடுவான்
எதிர்ப்பவர் தம்மை உடல்நொறுக்கி
எலும்பாய் மண்ணில் உதிரவைப்பான்
காட்டாற்று வெள்ளம்போல் பொங்கி
கயவர்கள் கலங்கிட ஓடவைப்பான்
சிங்கமென சினம் மனம்கொண்டு
சீரழிப்பான் வென்று பகைமுடிப்பான்
தாய்தந்தை தாரத்தின் துணைதுறந்து
தாய்நாட்டு நலத்தை மனம்சுமந்து
தாலாட்டின் தைரியம் துணைகொண்டு
வாலாட்டும் நரிகளை களையெடுப்பான்
பெற்றவர் உற்றவர் ஈகத்தால்
படைவீரன் தன்சுக தியாகத்தால்
மண்ணக வாழ்க்கை சிறக்கிறது
மாதாபிதா மனம் குளிர்கிறது.
சொ, பாஸ்கரன்