விளையாட்டுப் பொய் வினையானது
விளையாட்டுப் பொய் வினையானது
பாபுவும் யாழினியும் கோவையில் பக்கத்து பக்கத்து தெருக்களில் வாழ்ந்து வந்தவர்கள். பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள் எல்லா விஷயங்களையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருவரும் சேர்ந்து பலவற்றில் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பட்டம் வாங்கிய பின் இரு வருடங்கள் அங்கும் இங்கும் வேலை பார்த்த பின் பாபு அரசு வேலையில் சேர முடிவெடுத்து அதற்கு வேண்டிய அரசுத் தேர்வை எழுத முடிவு செய்தான் இதைக்கேட்ட யாழினி நானும் எழுதுகிறேன் என்று பாபுவோடு சேர்ந்து கொண்டாள். இருவரும் போட்டி போட்டுப் படித்ததால் ஆரம்ப தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற முடிந்தது. அதற்கு பிறகு அடுத்து
நடைபெற போகும் இறுதி தேர்வுக்கு சென்னைக்கு வரச்சொல்லி விட்டார்கள். தேர்வுக்கு ஒரு வாரம் முன்னால் ரயிலில் ரிசர்வேசன் இருவரும் செய்து விட்டனர். கோவையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாபு வந்து அமர்ந்து யாழினிக்காக காத்திருந்தான். ரயில் புறப்பட இன்னும் இருபது நிமிடமே இருந்தது. பாபு இரண்டாம் வகுப்பில் தனது ரிசர்வேசன் பகுதியில் கொண்டு வந்த சூட்கேஸ், பை அனைத்தையும் வைத்துவிட்டு வரவேண்டிய யாழினிக்காக எதிர் வரிசையில் உள்ள இடத்தில் கால் நீட்டி வைத்து காத்துக்கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டே இருந்தது. யாழினியைக் காணோம். பாபுவுக்குப் பதற்றம் அதிகமாகி விட்டது. நாளை காலை ஒன்பது மணிக்கு அரசாங்க அலுவலகத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது இரவு பத்து மணி ஆகி விட்டது. காலை ஆறு ஆறரைக்கெல்லாம் சென்னை சென்று அங்கு ஸ்டேஷனிலேயே ஒரு அறை எடுத்து குளித்து அலுவலகத்துக்குப் போய்விடலாம். கட்டாயமாக ஆஜராக வேண்டிய இறுதி தேர்வு இதில் வெற்றி அடைத்தால் வேலையில் சேர்ந்து விடலாம் . இவனோடு இறுதி தேர்வுக்கு யாழினி மட்டுமே கோவையிலிருந்து தேர்வாகி இருக்கிறாள்.
பாபு அவளிடம் முதல் நாளே சென்று விடலாம் என்று சொன்னான் . யாழினி ஒத்துக்கொள்ளவில்லை. இராத்திரி இந்த டிரெயின்ல போனா நாளை காலை போயிடலாம் என்று சொல்லி இந்த டிரெயினிலேயே ரிசர்வேசன் செய்ய சொல்லி விட்டாள்.
ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன, பாபு யாழினிக்கு போன் அடித்துப் பார்த்தான், “எல்லைக்கு அப்பால் இருக்கிறார்” என்ற பதிலே வந்தது, என்ன செய்வது யோசித்த பாபு ஏதோ முடிவு செய்தவன் போல எழுந்து ரயில் பெட்டியின் கழிவறைக்கு உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டு கைப் பேசியிலிருந்து “நூறுக்கு” போன் செய்து “இப்பொழுது சென்னைக்கு கிளம்ப இருக்கும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி விட்டு,போனை சுவிட்ச் ஆப் செய்தான், பின் அமைதியாக வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.முகம் வேர்த்து விறு விறுத்து போயிருந்தது,நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது.
ஐந்து நிமிடத்தில் கிளம்ப வேண்டிய ரெயில் பத்து நிமிடம் ஆகியும் நகராமல் இருந்தது. வண்டி கிளம்பவில்லை எல்லா பெட்டிகளிலிருந்தும் பயணிகள் இறங்கி கூட்டமாய் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு நடந்து வந்து கொண்டிருந்த டி.டி.ஆரிடம் ஏன் இன்னும் ரெயில் கிளம்பவில்லை? என்று அவரைக் கேள்விகளால் துளைத்தனர். அவர் எனக்கு என்ன காரணம் எனத் தெரியாது என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்ய ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் போலீஸ் படையாக வந்து பெட்டி பெட்டியாய் எதையோ தேடிக்கொண்டு வந்தனர். ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி ஒவ்வொரு அங்குலமாக தேடிக்கொண்டிருந்தனர். கூடவே மோப்ப நாய்களும் பெட்டி பெட்டியாய் உள்ளே வந்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. பயணிகள் யாவரும் இப்பொழுது கிலி அடித்தது போல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது? எதற்கு இத்தனை போலீஸ்? தேடுவதை பார்த்தால் வெடி குண்டு ஏதாவது இருக்குமா? ஒன்றும் புரியாமலும், வரும் போலீசிடம் எதைத் தேடுகிறீர்கள்? என்று கேட்கவும் பயந்து கொண்டு அமைதியாய் இருந்தனர்.
அரை மணி நேரம் ஓடியிருந்தது. பாபு இருக்கும் பெட்டியிலும் போலீஸ் நுழைந்து அங்குலம் அங்குலமாக தேட ஆரம்பித்தனர்.பாபுவுக்கு எதிரில் இருந்த பெரியவர் ஒருவர் தேடிக்கொண்டிருந்த போலீசிடம் என்ன சார் தேடுகிறீங்க? என்று கேட்க அவரும் யாரோ ரயிலுக்கு குண்டு வச்சிருக்கிறதா எங்களுக்குப் போன் பண்ணினாங்க, அதான் எல்லா இடங்களிலும் நல்லா தேடிகிட்டு இருக்கோம். பெரியவர் அப்படியே அதிர்ச்சியாகி அப்படியான நான் கீழே இறங்கிவிடுகிறேன், என்று அவசரமாய் இறங்கப் போனார். பெரியவரே பயப்படாதீங்க எல்லா இடங்களிலேயும் செக் பண்ணிட்டோம், இதுவரை ஒண்ணும் இல்லை, என்று சொல்லி சிரித்துக்கொண்டே இறங்கி போனார் அந்த போலீஸ்காரர்.
அப்பொழுது வேக வேகமாக வந்து கொண்டிருந்தாள் யாழினி, அவள் முகம் வெளுத்து வேர்வை ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அவள் பெட்டியை தேடி பார்த்துக்கொண்டே வந்தாள்.
அப்பொழுது வெளியே எட்டி பார்க்க வந்த பாபு “யாழினி” என்று உரக்கக் கூப்பிட்டான்.
அந்த பக்கம் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும அந்த சத்தம் கேட்டு திரும்ப யாழினியும் திரும்பி பார்த்தவள், வெளியே பாபு நின்று இந்த பெட்டிதான் வா..வா என்று கூப்பிட அப்பொழுது ஒரு இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து உங்க பேரென்னம்மா? என்று கேட்டார். இந்த கேள்வியில் மிரண்டு போன யாழினி பயத்துடன் தன் பெயரை உச்சரித்தாள். நீங்க இந்த டிரெயின்லதான் போகணுமா? ஆமா, உங்க டிக்கெட்ட காட்டுங்க? அவளின் டிக்கெட்டை வாங்கி பார்த்தவர், எதுக்கு போறீங்க சென்னைக்கு? அவள் நாளை நடை பெற இருக்கும் தேர்வை பற்றி சொன்னாள். அவள் கையிலிருந்த பெட்டி, மற்றும் கைப்பைகளை சற்று நேரம் பார்த்த இன்ஸ்பெக்டர் சரி சரி போங்க, டிரெயின் கிளம்ப போகுது என்று வழி விட்டார்.
அதற்குள் பாபு இறங்கி அவள் அருகே வந்தவன், எங்க நீ வராமே போயிடுவியோன்னு பயந்துட்டேன், சொல்லியவாறு அவளிடமிருந்த பெட்டி, பைகளை வாங்கிக்கொண்டு அந்த பெட்டியில் ஏறி அவளுக்கு வழி காட்டிக்கொண்டே சென்றான். யாழினியின் முகம் சற்று பேயறைந்தது போல இருந்தது. என்ன யாழினி இவ்வளவு லேட்டா வந்தே ? நாளைக்காலையிலே ஒன்பது மணிக்கு நாம் அங்கே இருக்கணும். நான் அப்பவே காலை வண்டியிலே போலாமுன்னு சொன்னேன் நீ கேட்டியா? இப்ப பாரு எவ்வளவு அவஸ்தை, இந்த வண்டி எப்போ புறப்படப்போகிறது என்பது இப்போ ஒரு பிரச்சனையாகி உள்ளது அதனால் லேட்டா சென்னை போய் நாம் ரெடியாகி அலுவலகம் செல்வோம் எல்லாமே ஒரு வகை படபடப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பேசிக்கொண்டே போனவன் ஒரு நிமிடம் நின்று அவளை திரும்பிப் பார்க்க அவள் பெட்டிக்குள் இருந்த இடத்தை விட்டு நகராமல் வெறித்தவாறு நின்று கொண்டிருந்தாள். திரும்பி வந்தவன் “யாழினி” என்று அவளைப் பிடித்து உலுக்கவும் அவள் தன்னுணர்வுக்கு வந்து என்ன? என்ன? என்று இவனைக் கேள்வி கேட்டாள்.
சரியா போச்சு போ அப்போ நான் பேசியது எல்லாம் காற்ற்றோடையா என்று அவளிடம் அலுத்துக்கொண்டு, முதல்ல உன் இடத்துல போய் உட்காரு எனக்கூறி அவளை உட்கார வைத்த பின் , தான் செய்த காரியத்தை நினைத்து அந்த நேரம் வரை பயந்து கொண்டிருந்தவன் கொஞ்சம் நிம்மதியடைந்தான். ஆயினும் யாழினியின் முகத்தை பார்க்க அவனுக்கு புதிராகவே இருந்தது. ஏன் அவள் இப்படி மிரண்டவள் போல் காணப்படுகிறாள்? வண்டி தவற விட்டு விடுவோம் என்ற பயத்தினால் இருக்கலாமோ என்று நினைத்தவாறு சிறிது கண்மூடினான்.
சிறிது நேரம் சென்றபின் கண் விழித்து எதிர் இருக்கையைப் பார்த்த பாபு அங்கு யாழினி இல்லாததால் மெல்ல தலை திருப்பி பார்த்தவன் அதிர்ந்தான். ரயிலின் கதவை திறந்து அங்கு நின்று கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி. இவன் மெல்ல எழுந்து சத்தமிடாமல் அவள் பின் புறம் சென்று முன்னெச்சரிக்கையாக அவள் முன்புறம் கையை கொண்டு போய் “யாழினி”இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்” இவன் குரலைக் கேட்டு இவன் எதிர்ப்பார்த்தது போலவே திடுக்கிட்டு வெளியே விழப்போனவளை அப்படியே திருப்பி உள்ளே தள்ளியவன் சடாரென ரயிலின் கதவை இழுத்து சாத்தினான்.
உனக்கு என்ன பைத்தியமா என்று குரலை உயர்த்தி சத்தமிட்ட பொழுது,தூக்கத்தில் இருந்த பலர் சட்டென தலையை உயர்த்தி பார்க்கவும், குரலை தாழ்த்தி “ப்ளீஸ்” வா வந்து உட்கார், என்ன பிரச்சனை என்னிடம் சொல் என்று மெதுவாக கேட்கவும் அவள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். பாபு என்னை மன்னித்து விடு, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த ரயிலில் ஒரு
வெடிகுண்டு வெடித்து நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். என சொல்லியவாறு முகத்தில் அறைந்து கொண்டு பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள்.
என்ன சொல்கிறாய் யாழினி முகத்தில் பீதியுடன் திடுக்கிட்டபடி கேட்டான். ஆமாம் பாபு இந்த கைப்பெட்டியை வைத்துவிட்டு அப்படியே சென்னைக்கு முன்னாடி பெரம்பூர் ஸ்டேசன்ல இறங்கிடனும்னு எனக்கு உத்தரவு, இதை நான் செய்யலையின்னு தெரிஞ்சா அங்க எங்க அப்பா,அம்மா இரண்டு பேரையும் கொன்று விடுவோம் எனப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்தவன், அடுத்து என்ன செய்வதுஎன்று சிறிது நிதானித்து, அவளது அந்த பெட்டியை சட்டென அவள் இருக்கையின் அடியில் இருந்து எடுத்து திறக்கப்போனான். அவள் தடுத்து, பாபு திறந்து விடாதே, அவர்கள் என்னிடம் இதை கொடுக்கும் பொழுதே இடையில் திறந்து வெளியே எடுத்து வீசலாம் என நினைத்தால் அது உடனே வெடித்து விடும் என பயமுறுத்தி இருக்கிறார்கள் என்று சொன்ன வுடன் அவன் ஒரு சில நிமிடங்கள் தாமதித்த பின் அவனுக்கு ஞாபகம் வந்தது, இன்னும் சற்று நேரத்தில் ஒரு ஆற்றை வண்டி கடக்க வேண்டியிருக்கும் என்பது , உடனே கதவோரம் வந்து , கதவை திறந்து காத்திருக்க ஆரம்பித்தான்.
பாலத்தில் செல்லும் கடக் கடக் எனும் ஓசை கேட்க இவன் சட்டென பெட்டியைக் கதவை திறந்து தனது பலம் கொண்ட மட்டும் வெளியே எறிந்தான். அது பாலம் தடுப்பு சுவரை தாண்டி தண்ணீரை நோக்கிச் சென்று விழுந்தது. ரயில் விரைவாக பாலத்தை கடந்தது. உள்ளே வந்தவன் சட்டென தன் பொருட்களை எடுத்துக்கொண்டு, யாழினி, எல்லாத்தையும் எடுத்துக்கோ, அடுத்த ஸ்டேசன்ல, நாம் இறங்கி போலீஸ் ஸ்டேசன் போகணும். சொல்லிவிட்டு அவள் தான் கொண்டு வந்திருந்த கை பைகளை எடுத்துக்கொண்டவுடன் வரப்போகும் அடுத்த ஸ்டேசனில் இறங்குவதற்காக யாழியினியுடன் காத்திருக்க ஆரம்பித்தான்.
அதுவரை தூக்க கலக்கத்தில் இருந்த அந்த இரயில்வே போலீஸ் ஸ்டேசன், இவர்கள் இருவரும் சொன்ன கதையை கேட்டு சுறு சுறுப்படைந்ததுஇன்ஸ்பெக்டர் கணேசன் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவர், சிறிது நேரம் யோசித்து ஏம்மா நீ இறங்கினதுக்கப்புறம் எத்தனை மணிக்கு வெடிக்கும் என்று ஏதாவது அந்த ஆட்கள் சொன்னாங்களா என வினவ,
இல்லை சார், சென்னைக்கு முன்னாடி நிக்கற ஸ்டேசன்ல இறங்கிக்கோ என்று மட்டும்தான் அவங்க சொன்னாங்க .
கொஞ்ச நேரம் தாடையை சொறிந்தவர், போன் எடுத்து இப்பொழுது இரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று விசாரித்தபின் வண்டியை அங்கேயே ஒரு அரை மணி நேரம் நிறுத்தி வைக்க சொன்னார். என் கூட வாங்க என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு ஜீப்பில் அந்த ஊர் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை விவரமாக கூறி யாழினியின் பெற்றோருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்து கொடுக்க சொல்லிவிட்டு, பாபுவிடம் நல்ல வேளை யாழினி இறங்க வேண்டிய ஸ்டேனுக்கு, டிரெயின் இன்னும் போய் சேரவில்லை, அதனால், உங்களை அந்த டிரெயினிலேயே ஏற்றி விடுகிறேன்,யாழினி மட்டும் அவர்கள் சொன்ன இடத்தில் இறங்கட்டும், போலீஸ் அவளை சுற்றி கண்காணித்துக்கொண்டிருக்கும். நீ சென்னைக்கு சென்று இறங்கிக்கொள். மற்றதை போலீஸ் பார்த்துக்கொள்ளும் என்று கூறிட இருவரும் சார் எங்களை இந்த இறுதித் தேர்வு எழுத அனுமதி கொடுங்க சார், அதை முடித்து விட்டு உடனே திரும்ப வந்துடறோம் என கேட்டுக்கொண்டனர் , சிறிது யோசித்தவர், சரி நீ முதல்ல போ, யாழினியைப் போலீஸ் கொண்டு வந்து அங்கே விடும். தேர்வு முடிஞ்சு நீங்க கமிசனர் ஆபிஸ் வந்துடணும்.
சென்னையில் தேர்வினை எழுதி விட்டு பாபுவும், யாழினியும், போலீஸ் கமிசனர் அலுவலகம் வந்தனர். காத்திருந்த போலீஸ் அதிகாரிகளிடம் நடந்த விசயங்கள் அனைத்தையும் சொன்னார்கள். பாபு தான் யாழினிக்காக விளையாட்டாய் “வெடிகுண்டு” வைத்துள்ளதாக போனில் சொன்னதையும் சொன்னான்.அதனால், இரயில் தாமதமாக கிளம்பியதையும், ஆனால் யாழினியே வெடிகுண்டுடன் வருவாள் என எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் அதை உடனே ஆற்றில் வீசி விட்டதையும் சொன்னான்
ஒரு போலீஸ் அதிகாரி கமிசனரிடம் ஆற்றில் விழுந்த அந்த சூட்கேஸ் எடுக்கப்பட்டு விட்டதையும்,.அதில் வெடி குண்டு இருந்தது, என்றும் தெரிவித்தார். பாபு போனில் சொன்ன வெடி குண்டு புரளிக்கு அவனுக்கு தண்டனை உண்டு என்றாலும், அந்த வெடிகுண்டை ஆற்றில் வீசியிருக்கா விட்டால் பெரிய ஆபத்தே நேர்ந்து ஏராளமான உயிர்கள் பலியாகி இருக்கும். அதனால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்கள்.
அவன் கவலையுடன் யாழினியை பார்க்க அவளின் அப்பா இரணுவத்தில் அதிகாரியாய் இருந்த பொழுது தீவிரவாதிகளை எதிர்த்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவரை பழி வாங்கவே அந்த கூட்டத்தினர், இந்த பெண்ணை பயன் படுத்தி அவர்கள் குடும்பத்திற்கு, அவப்பெயரை உண்டாக்க முயற்சித்துள்ளனர். நல்ல வேளை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையில் அவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த கூட்டத்தை பிடித்து விட்டதாகவும் கமிசனரிடம் தெரிவித்தனர்.
கமிசனர் இருவரையும் போக சொல்லிவிட்டு, கூப்பிடும் பொழுது வரவேண்டும் என்றும் சொன்னார்.
வெளியே வந்த இருவருக்கும் மகிழ்ச்சி மனதில் வந்தது.
விளையாட்டாக சொன்ன ஒரு பொய் வினையாகி விட்டு நல்ல காலமாக தங்களை விட்டு அகன்றதால் சந்தோஷமாக அலுவலகத்தை நோக்கி கையை பிடித்தவாறு சென்றனர்.