தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது - கார் நாற்பது 25

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது! - கார் நாற்பது 25
இன்னிசை வெண்பா

கருங்கால் வரகின் பொரிப்போல் அரும்பவிழ்ந்(து),
ஈர்ந்தண் புறவில் தெறுழ்வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய்குறி; வாரார் அவரென்று
கூர்ந்த, பசலை அவட்கு! 25

- கார் நாற்பது

பொருளுரை:

குளிர்ச்சி மிக்க காட்டில் கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) தலைவர் இனி வரமாட்டாரென்று தலைவிக்கு பசலை மிக்கது!

ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல்,

தெறுழ் - காட்டகத்ததொரு கொடி

கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (29-Sep-25, 11:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே