செல்வகைச் சேவகர் சென்று - சிறுபஞ்ச மூலம் 40

நேரிசை வெண்பா
(’வ்’ ‘ல்’ இடையின எதுகை)

உடையிட்டார் புன்மேய்வா ரோடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேது மின்றி - நடையிட்டார்
ரிவ்வகை யைவரையு மென்று மணுகாரே
செல்வகைச் சேவகர் சென்று! 40

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

(தமக்கஞ்சி) உடுத்த உடையைப் போகவிட்டவர், புல்பறித்து வாயிலிட்டார், ஓடுகின்ற நீரிற் புகுந்தவர், கைப்படையை விட்டவர் பற்றுச் சிறிதுமில்லாமல் (ஓடமாட்டாது) நிலைதளர்ந்திருந்தவர் இவ்வகைப்பட்ட ஐவரையும் செம்மையான தன்மையையுடைய வீரர்கள் எந்நாளும் (தீங்கு செய்யச்) சென்று சேரமாட்டார்!

கருத்துரை:

உடுக்கை யிழந்தவர் முதலிய ஐவரையும் வருத்தா தொழிதல் வீரர்க்குரிய அறமாம்.

படை – படுத்தற்குரியது; படுத்தல் – கொல்லுதல்; செவ்வகை – நீதித்தன்மை; ஓடுநீர்புக்கார் - புறங்காட்டி யோடுபவர் எனலுமாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-25, 1:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே