கல்யானை மீண்டும் கரும்பு தின்றது!!!... தமிழ் புராண கதை...

மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் மிகப் பிரபலம். இன்றைக்கும் சோமசுந்தரேஸ்வரர் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளையானைகளை எல்லோரும் காணலாம். அந்த யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.

வரலாற்றுக் காலத்தில் மீண்டும் அந்த யானைகளில் ஒன்று கரும்பு தின்றக் கதையைக் கேட்டிருக்கிறீர்களா? செவிவழிச்செய்தி ஒன்று அதனைக் கூறுகிறது.

மாலிக் காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.

அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார்.

அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு 'ஆகா. இந்த இந்துக்கள் எல்லோரும் படு முட்டாள்களாக இருக்கிறார்களே. கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தார் மாலிக் காபூர். 'அந்தக் கதையைச் சொன்ன முட்டாளைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி திருக்கோவிலுக்கு வந்தார்கள்.

துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டார் மாலிக் காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக் காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக் காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை.

கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள். வியந்து கொண்டே மாற்று மதத்தவர் திருக்கோவிலை விட்டுச் சென்றனர்.


















செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ. சத்யாசெந்தில், முதுகலை (4-Mar-12, 4:24 pm)
பார்வை : 811

புதிய படைப்புகள்

மேலே