கடாமீசை

கடாமீசை
மாபெரும் போட்டி இறுதிக் கட்டத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. நாட்டின் பல இடங்களில் இருந்து வந்த இலட்சக்கணக்கான விண்ணப்பங்களை வடிகட்டி, ஆயிரக்கணக்கானவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பல முனைகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிச் சுற்றுக்கு மூன்று பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆவாரம், சூரப்பன், பக்கீரன் ஆகிய மூவரும்தான் அவர்கள் என்பதை கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தக்குடிக்கு அறிவிப்பது அவசியமாகப் படவில்லை! மூவரும் கடா மீசைகளைத் தடவித் தடவிக் கொண்டு ஒவ்வொருவரை பார்த்து ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.
மீசையின் முனையில் சாத்துக்குடியை எவ்வளவு நிமிடங்கள் வைத்திருப்பது, கடாமீசையில் கயிறு கட்டி மனைவியை இழுப்பது எனப் பலப்பல போட்டிகள் நடந்து முடிந்து மூவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த மீசைப் போட்டியில் வெற்றி பெற்றால் உலக ’ஆண்மகன்’ பட்டம் கிடைக்கும் என்னும் மயக்கத்தில் இப்படியும் அப்படியும் திரும்பி ஆவாரம் அலப்பரை செய்தார்.
இறுதிப் போட்டி ஆரம்பமானது. பக்கீரன் டம்பளரில் இருந்த வடிகட்டாத டீயை எடுத்து அடர்ந்த தனது மீசையில் ஊற்றி வடிகட்டினார்! சூரப்பன் பாலை எடுத்து மீசையில் சிறு ஏடுகூட இல்லாமல் வடிகட்டிக் காட்டினார் .
சனங்கள் ஆரவாரம் செய்தனர். தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்மக்கள் பேச மறந்து மெய்சிலிர்த்துப் போயிருந்தனர்.
ஆவாரம் அலட்சியமாக சூரப்பனையும், பக்கீரனையும் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தார். சூரப்பன் கடா மீசையை கோவத்தில் முறுக்கினார். பதிலுக்கு ஆவாரம் நன்றாக இன்னும் மீசையை முறுக்கி, தொலைக்காட்சி கெமராக்களில் இப்படியும் அப்படியும் ஆட்டிக் காட்டி போஸ் கொடுத்து கடுப்பேற்றினார். மக்கள் பொறுமையை இழந்தனர். இந்த ஆள் போஸ் கொடுப்பதை எப்பொழுதுதான் நிறுத்துவார், இதே பொழப்பாக அலைகிறாரே என்று சலிப்பின் உச்சத்திற்குச் சென்றனர்.
ஆவாரம் பாலை எடுத்து கடா மீசையில் வடிகட்டிக் கொண்டே பக்பக்கென்று கெக்கலியிட்டுச் சிரித்தார். அடர்ந்த மீசையில் கீழே பால் வரவில்லை. பால் தண்ணீராக வடிகட்டப்பட்டு வழிந்தது. வெள்ளை பால் பொருள் மீசையின் மேலே ஒட்டிக் கொண்டது. தொலைக்காட்சி கெமராக்கள் மீசையின் மிக அருகே சென்று பெரிதாகக் காட்டின. தண்ணீர் மட்டும் மீசையில் வடிந்தே தவிர பால் வடியவில்லை. அப்பொழுது எழுந்த மக்கள் ஆரவாரம் அடங்கவே இல்லை. ஆவாரம் நடுவர் அறிவிக்கும் முன்பே பரிசுக் கோப்பையை எடுத்து கடாமீசையின் மீது வைத்து அப்படியும் இப்படியும் தொலைக்காட்சிக்கு போஸ் கொடுத்தார்.
2
இந்த அதிசய, பயங்கர கனவினால் சாமிநாதன் திடுக்கிட்டு அலறி எழுந்தான். முகத்தைத் தடவினான். மீசையில்லாமல் முகம் மழு மழுவென இருந்தது.
மீசை இல்லாமல் இருப்பது ஒன்றும் தலை மூழ்கி போகும் விசயம் இல்லைதான்! போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு, மீசை இல்லாமல் இருப்பது பெரும் குறையாக்கப் பட்டது.
தங்கப் பதக்கம், வால்டர் வெற்றிவேல், கேப்டன், காக்கிச் சட்டை. . . இன்ன பிற தமிழ் சினிமாக்களைப் பார்த்துப் பார்த்து சாமிநாதன் வாழ்க்கை இலட்சியமே போலீஸ்காரனாவது என்பதாக மாறியது.
அவனது அப்பா மேல்படிப்பு படித்தால் நல்ல வேலைக்கு போகலாம் என்று ஆலோசனை வழங்கினார். சாமியின் நாட்டம் போலிஸ் வேலையிலேயே இருந்ததால், படிப்பில் கவனம் செல்லவில்லை. போலீஸ் துறைக்கு உடலைத் தயார் செய்வது அவனது முழுநேரப் பணியானது.
வாரத்தில் பத்து முட்டைகள், மூன்று நாள்கள் இறைச்சி, தினமும் காலையில் முளை கட்டிய மூக்கடலை . . . என்று சாமியின் உணவுப்பட்டியல் நீண்டது. தள்ளு வண்டியில் சிறுகடைகளில் சாப்பிடும் பீப் பிரியாணி, பீப் சூப் இந்த முறை கணக்கில் வரவில்லை.
ஜிம்மில் சேர்ந்து தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் உடலை முறுக்கேற்றினான். ஐந்து பேக், ஆறு பேக், ஏழு பேக் என்று ஆரம்பித்து உடம்பில் பேக்குகள் எண்ணிக்கை ஏறிக் கொண்டே சென்றது.
தினமும் காலையில் ஓட்டப்பயிற்சி செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஓட்டம் அதிகரித்தது. இளைய தளபதி விஜய் ஸ்டைலில் லாரி கூடவே ஒடினான். ஒரு கட்டத்தில் உண்மையாகவே லாரியைக் கடந்து ஓடினான். கடந்தபின் டிரைவருக்கு டாட்டா காட்டினான். சினிமாவில் டிரைவர் கை காட்டியது போல் டாடா காட்டுவார் என எதிர்ப்பார்த்தான்,
”டேய் சாவு கிராக்கி . . . நீ ஓடி வந்து விழறதற்க்கு ஏ வண்டியாடா கெடைச்சது. சாவு கிராக்கி. . சாவு கிராக்கி . . ”என்ற வசவுதான் கிடைத்தது அவனுக்கு.
பதினெட்டு வயது நிறைவடைந்ததும், போலிஸ் வேலைக்கு ஆள் சேர்க்கும் வைபோகத்திற்கு சாமிநாதன் சென்றான். அங்குக் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான். கடல் அலையென இளைஞர்களும், இளைஞிகளும் அங்கு குவிந்திருந்தனர். நாட்டிற்குச் சேவை செய்யும் ஆர்வத்தில் அவர்கள் வரவில்லை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் அவனுக்கு உணர்த்தியது. அவன் முகம் சுண்டிப் போனது. எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றான். கடைசியாக உயரத்தை அளப்பதற்கான வரிசையில் நின்றான். உயரும் அளக்கும் பலகையில் ஏறி நின்றான்.
“எம்பி நிக்காதடா .... சரியா நில்லுடா!”
போலிஸ்காரர் எரிந்து விழுந்தார். அவன் சாதாரணமாகத்தான் நின்றான். டப் டப் என்று மேலே உள்ள அளவு மட்டப்பலகையால் அவன் தலையில் ஓங்கி ஓங்கி இரண்டு தடவைகள் அந்த போலீஸ்காரர் அடித்தார். வலியில் சாமிநாதன் சிறிது குனிந்தான். அந்த அளவை போலீஸ்காரர் குறித்தார். அவன் உயரத்தில் மூன்று சென்டி மீட்டர் குறைந்தது.
பிறகு மீண்டும் மீண்டும் போலீஸ் வேலைக்காக மூன்று ஆண்டுகள் படையெடுப்புகளை அவன் நிகழ்த்தினான். அதன் பிறகே வெற்றிக்கனி அவன் கையில் கிடைத்தது.
பயிற்சி முடித்து வேலையில் சேர்ந்தான். நல்லபடியாக நகர்ந்து கொண்டிருந்தது. அரசல் புரசலாக குசுகுசுவென அவனை பார்த்து போலீஸ்காரர்கள் சிரிப்பதைக் கண்டான். இன்ஸ்பெக்டர் இவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் முறுக்கு மீசையைத் திருகினார். கத்தை மீசை வைத்திருந்த சகபோலீஸ்காரர் சாமிநாதனைக் கேட்டு விட்டார்.
“தம்பி . . மீசைதான் போலீஸ்காரனுக்கு அழகு. மீசையை கத்தையா வளக்கணும்” இப்படி தான் மீசை விவகாரம் ஆரம்பித்தது.
மப்டியில் நாலைந்து போலீஸ்காரர்கள் சேர்ந்து சாராய ரெய்டு சென்றனர். அங்கிருந்த மக்களிடம் கள்ளச் சாராயம் விற்பதை விசாரித்தனர். ஒருவர் அவர்கள் யார் என்று கேட்டார்.
“எங்க மீசைகளைப் பார்த்த தெரியலையா . . .?”
என்று மீசையை போலிஸ்காரர்கள் தடவினர். அப்பொழுது அவர்கள் சாமிநாதனை நக்கலாகப் பார்த்துச் சிரித்தனர்.
அவனுக்கு அவமானமாகப் போய் விட்டது. இந்த வேலைக்கு ஏன் சேர்ந்தோம் என்று நினைத்தான்.
“மீசை இல்லாமல் ஒம்போது மாதிரி இருக்க. . ”
ஒரு மேலதிகாரி நேரடியாகச் சொல்லிவிட்டார். ஒவ்வொரு போலீஸ்காரர்க்கும் நம்பர் இருக்கும். சாமிநாதன் நம்பர் 1327. ஆனால் அவனை நேரில் பார்க்கும் பொழுதுதான் இந்த எண்ணைப்- பயன்படுத்தினர். அவன் இல்லாத நேரத்தில் அவனுக்கு சக போலீஸ்காரர்கள் வைத்த நம்பர் . . ஒன்பது . .
மீசை பற்றி சாமி இப்பொழுது தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். சாதாரண கான்ஸ்டபிளில் இருந்து ஜ.ஜி வரை மீசை வளர்க்க கணிசமாக நேரம் செலவிட்டனர். அதற்கான சிறப்பு திரவியங்களைப் பயன் படுத்தினர். தங்கள் மீசையை ஒதுக்குவதற்கு சிறப்பு முடிதிருத்துபவரையும் அவரவர் சக்தி, வசதிக்கேற்ப ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். வீரம், தைரியம், உறுதி, கம்பீரம், அதிகாரம் இவைகளின் குறியீடாக மீசை இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்மை = கடாமீசை = போலீஸ் என்பது தமிழகப் போலீஸ் துறையின் கணிதச் சமன்பாடாக விளங்கியது! இதற்கு முன்னர் மீசை வளர்ப்பதற்கு சிறப்பு அலவன்ஸ் தந்ததாகக் கூட கேள்விப்பட்டான்.
உடல் வலிமை, மனத்திண்மை, நுண்ணறிவு ஆகியவற்றைப் பயிற்சிகள் செய்து வளர்த்து கொண்ட சாமிக்கு, மீசை பற்றித் தெரியாமல் போனது குறித்துத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.
மீசையை வளர்ப்பதற்குக் கடும் முயற்சிகளைச் செய்தான். முப்பது நாளில் வழுக்கை மண்டையில் கருகரு முடிவளரும் தைலம், அமோசான் -ஆப்பிரிக்க காடுகளில் வளரும் அரியவகை மூலிகை தைலம்...... என்று பலதையும் சாமி முயற்சி செய்து பார்த்தான். அலோபதி, சித்தா, யுனானி, ஓமியோ என்று பல வைத்தியங்களை மாற்றி மாற்றிப் பார்த்தான். அழகான முகத்தை அலங்கோலம் படுத்தியது தான் மிச்சமானது. மேல் உதட்டில் மீசையெனச் சில முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அசிங்கமாய் வேகமாக வளர்ந்தன.
மீசையைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகளை தேடித் தேடிப் படித்தான். தமிழ்நாட்டிற்கு வெளியே மீசை பற்றி இவ்வளவு காத்திரம் இருக்கவில்லை. இந்தி, ஆங்கிலப் படத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு மீசை இருப்பது இல்லை. மா-சே-துங் முதல் ஜார்ஜ் புஷ்வரை பலருக்கும் மீசை இல்லை. மாவீரன் அலெக்சாண்டர் என்ன முறுக்கு மீசையா வைத்திருந்தார்? இந்தக் கேள்விகள் சாமியின் நெஞ்சைத் துளைத்தன.
“ மீசை முளைத்தோரெல்லாம்
பாரதி என்றால்
எனக்கும் ஆசை
கவிதை வடித்திட
இப்படிக்கு
கரப்பான் பூச்சி”
என்ற கவிதை சாமிக்குப் பிடித்துப்போனது. இதெல்லாம் பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை. ஒரு கட்டத்தில் மீசை இல்லாமல் போலீஸ் உத்தியோகம் செய்ய முடியாது என்ற விரக்தியின் எல்லைக்கே அவன் தள்ளப்பட்டான்.
திடீரென டெங்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் படுத்த படுக்கையானான். வண்ண வண்ண மாத்திரைகளை விழுங்கியும் நோய் தீர ஒரு மாதம் ஆனது. மீசை பற்றி மறந்தே போனான்.
மீண்டும் வேலைக்குப் போக வேண்டி வந்ததும், மீசையைப் பற்றி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். அருமையான யோசனை உதித்தது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமலுக்கு நாகேஷ் மாதிரி இவனுக்கு நண்பன் ஒருவன் கிடைத்தான்.
கருகருவென்ற ஒட்டு கடாமீசையுடன் வேலைக்குச் சென்றான்.
இவனது தடித்த மீசையைப் பார்த்த போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் வந்தது.
“கண்ட கண்ட வைட்டமின் மாத்திரைகளை விழுங்கிதால் இப்படி அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. நான் ஆம்பள சிங்கமாச்சே” என்று கதை விட்டான்.
வேறு வழியின்றி எல்லாரும் நம்பினர். சிலர் லேசாக இழுத்தும் பார்த்தனர். கடாமீசை நன்றாக ஒட்டிக் கொண்டதால் இவன் மானம் கப்பல் ஏறவில்லை!
அடிக்கடி தனது கடாமீசையைத் தடவி, மற்ற போலிஸ்காரர்களை கிண்டல் தொனியில் பார்த்தான். தனது ”ஆண்மையை” இப்படியாக சாமி நிரூபித்தான் .
ஆனால் அதற்கு இவ்வளவு சீக்கிரத்தில் சோதனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
சுதந்திரதின அணி வகுப்பு காவல்துறை சார்பில் மெரினாவில் நடந்தது. அணி வகுப்பின் முன்னணி வரிசையில் சாமிநாதன் இருந்தான். கையில் நீண்ட பைனட் துப்பாக்கியுடன் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தான்.
முதலமைச்சர் கண்ணாடித் துளைக்காத மேடையில் நின்று அணிவகுப்பை கறுப்புப் பூனை புடை சூழ பார்வையிட்டு கொண்டிருந்தார். போலீஸ் அணிவகுப்பு முதல்வர் மேடையருகே வந்தது.
“படார் படார் ....டமார் டமார்” என்று பூட்ஸ் கால்கள் சத்தம் காதைக் கிழித்தது. சாமிநாதன் துப்பாக்கியை நேராக நீட்டி, மடக்கி தரையில் அடித்து நேராக நிமிர்த்தி சல்யூட் அடிக்க துப்பாக்கியை உயர்த்திய பொழுது, கை பிசகியது. பயடெட் கத்தி தவறுதலாக அவன் முகத்தில் உராசி, கத்தி முனை ஒட்டுக் கடாமீசையைப் பிய்த்து எடுத்து விட்டது. இக்காட்சி கண்டு பயத்தில் இருந்த முதல்வர் அலறினார். அனைவரும் சேர்ந்து அலறினார்..
உடனே பட பட வென்று கறுப்புப் பூனைகளின் இயந்திரத் துப்பாக்கிகள் வெடிக்க சாமிநாதன் உடல் சல்லடையாக்கப்பட்டது. ஓட்டு கடாமீசை தூரத்தில் மண்ணில் வீழ்ந்தது. அது அவனைப் போல் துடிக்காமல் வீழ்ந்து கிடந்தது.
பெரும் கலவரம் ஏற்பட்டது. மறுநாள் அனைத்து தினசரிகளிலும் நாலுபத்தி தலைப்பு செய்திகள் வந்தன.
”பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு”.