மலரும் தமிழீழம்!
என் ஈழத்து தமிழனே!
இனிய தோழனே!
உன் கிழக்கு வானில்
இனியொரு
உதயத்திற்கு உத்திரவாதம்
இல்லையென்று
எவர் சொன்னாலும் நம்பிவிடாதே!
உன்னவர்கள் ஏந்திய
சில துப்பாக்கிகளும்
கொஞ்சம் தோட்டாக்களும்
வேண்டுமானால் தோற்றிருக்கலாம்.
ஆனால்
உயிர் வதைபட்ட
ஓர் இனத்தின் கோபம் தோற்றதாய்
இந்த யுகத்தில் பதிவேதும் இல்லை.
சுதந்திர வேள்வி என்பது
ஏற்றப்பட்டு எரிகின்ற இடம்
மண்ணில் இல்லை.
அது மனதில் எரிகிறது.
இழந்த விடுதலைக்காய்
என் மக்கள் விடும்
ஏக்க பெருமூச்சுதான்
அந்த யாகம் வளர்க்கிறது.
ஆணவக் கொடி பிடித்த
ராஜாங்கங்களின் அடிமண் கூட
இன்று அடையாளத்திற்கு இல்லை.
முள்ளிவாய்கால்
முற்றுப் புள்ளியல்ல.
அங்கு அள்ளி தெளித்த
ரத்தம் தான்
சுத்தமான சுதந்திரத்தின் வித்து.
இது அடைகாக்கும் நேரம்!
ராஜாளிப் பறவைகள்
சிறகசைக்கும் நேரம் வரும்.
சுதந்திர சூரியனை
தன் கூர்முனையால்
ஈழத்தின் கீழ்வானத்திற்கு
இழுத்துவரும்.
பொறுத்திரு!
பொய்மையின் முகத்திரை
சிலந்தி வலையினும்
சிறுமைப்பட்டது.
விடுதலை வெப்பம்
ஊழித் தீயினும்
ஆற்றல் மிக்கது.
முன்பு பேசா நா கொண்ட
ஐ. நா. கூட இப்போது
உனக்காக பேசத்துவங்கி இருக்கிறது.
இருதயம் இல்லாத
இயந்திரங்களை இனம் காண
இங்கே முயற்சி நடக்கிறது.
இதோ!
விடியலுக்கு அடிவானம்
முடிவெடுக்கிறது.
தமிழீழ தாகம்
உன்னை மட்டுமல்ல
என்னையும் வாட்டுகிறது.
என் விரல்களோ
விடுதலை ராகம் மீட்டுகிறது.
இன்னும் உன் விடுதலைக்காக
உதிரச் சொட்டு கேட்கும்
ஓநாய் உண்டென்றால் சொல்.
என் ரத்தம் தருவதாய்
முதலில் அவனுக்கு சொல்.
இதோ!
விடியலுக்கு அடிவானம்
முடிவெடுக்கிறது.
மலரும் தமிழீழம்!