என்றடங்கும் அம்மா ?

என்றடங்கும் அம்மா ?

நீளமாய் இறுதி மூச்செடுத்து

நீ அடங்கிய நிமிடங்கள்

ஆழமாய் என் நெஞ்சில்

அறைந்து ஏற்படுத்திய அதிர்வலைகள்

என்றடங்கும்?

என்ன சொல்ல நினைத்திருப்பாய்?

எப்படித் தவித்திருப்பாய் ?

வலித்ததோ?

உன் கிளைகள் நாங்கள் சுற்றிநிற்க

உன்னை வேரறுத்துச் சென்ற

காலன் மேல் வருத்தமோ?

இப்படியாய் என்னைச் சுற்றிச்

சுழன்றடிக்கும் கேள்விகள்

என்றடங்கும் ?

மற்ற மரணங்கள் வாழ்வின்

நிகழ்வுகள் போல் கடந்து விட

உன் மரணம் மட்டும்

உணர்வெல்லாம் தேங்கி நின்று

பாலைச் சுடுமணலாய்

உன் மேனி தொட்ட நெருப்பாய்

என்னைத் தகிக்கிறதே -அது

என்றடங்கும்?

நில்லாமல் சுழலும் காலமும்,

விடாமல் துரத்தும் கடமைகளும் ,

வாழ்க்கையை இழுத்துச் செல்லத்தான்

செய்யும் -ஆயினும்

எனதாய் எக்கணமும் வாழ்ந்த

என் தாய் இருந்த இடம்

எது நிரப்பும் ?

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (1-Aug-12, 11:30 am)
பார்வை : 222

மேலே