நில்! கவனி! கடந்துசெல்!

உருட்டி ஊட்டிய பின்பு
வயிறு நிறைத்த
வழித்துப் பிசைந்த
கடைசிக் கையுருண்டை..

கோர்த்த சரம் போக
எஞ்சிச் சிதறிப்போன
பிஞ்சிப் பிச்சி மொட்டுகள்..

கடைசிப் பொருளைப்
பொறுக்காமல் விட்டுவந்த
வாடகை வீடு..

மருண்டு விழித்த பின்னிரவு
உறக்கத்தினூடே
புதைந்த கனவுவொன்றின் எச்சம்..

சாயம் வெளுத்த ரவிக்கையின்
ஆயுளை நீட்டிக்கொண்டே சென்ற
காலண்டர் ஊசி..

மைத்தடவல்களை மறந்து
ஸ்டிக்கர்ப் பொட்டுகளுக்கு மாறிவிட்ட
கண்ணாடிச் சட்டம்..

மொழுகிய மேடையின் ஈரத்தில்
கரைந்து மணந்த
வெள்ளைக் கோலங்கள்..

காக்காமுள் குத்திய காற்றாடியுடன்
ஓலைக்கூரையில்
காய்ந்து போன வேப்பங்குச்சி..

அடிவாங்கிய ஒலிச்சுருளின் பாடலைப்போல
அவ்வப்போது நிறுத்தி
நிதானிக்கச் செய்பவைகளால்
நகர்ந்து கொண்டிருக்கும் என் உலகம்..

எழுதியவர் : சுபத்ரா (8-Aug-12, 11:44 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 159

மேலே