மண்டை ஓடுகள் மண்டிய காடு

ரத்தம் குடிக்கும் பூமி-வெடிச்
சத்தம் ஓயாதோ சாமி
யுத்தம் முடிகின்ற நாளில்
உலகம் இருந்திடாத நியதி.!
ஆதமின் மகன் அன்று சிந்திய
குருதியின் முதல் சொட்டை
ருசித்துப் பார்த்து விட்ட பூமிக்கு
தாகம் இன்னும் தீர்ந்த பாடில்லை.!
சதை தின்று சப்புக் கொட்டி
எலும்பு கடித்து ஏப்பம் விட்டு
மண்டை ஓடுகளை மிச்சம் வைக்கும்
உயிரினம் புசிக்கும் பூமி இது.!
மண்ணாசை பொன்னாசை
பெண்ணாசை போக இப்போ
எண்ணெய் வள ஆசையில்
எரிந்து கொண்டிருக்கும் போர்கள்.!
அழிவாயுதம் பல கண்டு-அதை
அப்பாவி உயிர்களிடம் சோதிக்கும்
அதிகாரம் படைத்த நாடுகள் எல்லாம்
காலனின் காவுக்கு முகவர்கள்.!
மண்ணுலகம் தோன்றிய காலம் தொட்டு
மரித்துப் போன உயிர்களை எல்லாம்
மனக்கணக்கில் பார்த்தாலுமே இவ்வுலகம்
மண்டை ஓடுகள் மண்டிய காடுதான்.!