எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பின் சாரல்கள் ! --------------------------- ஒவ்வோர் கனவையும் உன்னதம்...

நட்பின் சாரல்கள் !
---------------------------

ஒவ்வோர் கனவையும் உன்னதம் ஆக்கும் 
உன்றன் நட்பின் உயிர்மை - விடியல் 
அவ்வோர் நினைவையும் அகத்தில் நிறைக்கும்
அனிச்சம் பூவின் மகிமை !

பூவில் வரைந்த ஓவியம் போல்'எழில் 
புன்னகை காட்டும் புருவம் - தமிழ் 
பாவில் வடித்த பண்ணிசை போல்'எழில் 
பண்பினை ஊட்டும் உருவம் !

வேதம் சொல்லும் விழிகள் இரண்டும் 
வெட்சிப் பூக்களின் தாது - அழகுக் 
காதில் ஜொலிக்கும் கம்மல்கள் இரண்டும் 
கைக்கிளைக் கிள்ளையின் தூது !

படத்தில் காணும் பாவை இவளும் 
பாடும் கம்பன் கவிதான் - மனத் 
தடத்தில் நாணும் பூவை இவளும் 
தங்கத் தருவின் கனிதான் ! 

நித்தம் ஓர்கவி நெஞ்சில் எழுதிடும் 
நினைவுகள் தந்தவள் நீதான் - அதைச் 
சத்தம் இன்றியே சரணப் பாடிடும் 
சந்தக் குயிலும் நீதான் !

செவ்விதழ் சிந்திய செந்தேன் புன்னகை 
செத்தும் மாறா ஓவியம் - உன்னைச் 
செதுக்கும் விரல்கள் சிந்தும் வியர்வையால் 
செழுங்கவி எழுதினால் காவியம் !

எத்தனை பிறவிகள் எடுத்தும் உயிரில் 
இருந்திடும் உந்தன் அன்பு - உடல் 
செத்தும் அழியா சுகந்தம் காக்கும்
சுடலையில் எந்தன் என்பு !

பாவலர் ,வீ. சீராளன் 

பதிவு : சீராளன்,வீ
நாள் : 20-Sep-15, 4:55 pm

மேலே