இமயத்தில் கொடிநடு

வனப்பு நிறைந்த வாலிபனே! - நீ
அனலைக் கக்கும் சூரியனே!
மேனியில் மின்னல் கொண்டவனே! - நீ
மேதினி மேம்பட வந்தவனே!

உடலின் நரம்பைத் தூண்டிவிடு - பெரும்
கடல்போல் தடைவரும் தாண்டிவிடு
வெற்றியை நோக்கி நடையெடு - உனை
பற்றிடும் தீமைக்கு விடைகொடு

கையூட்டுக் கூட்டத்தை கடைந்தெடு - அதை
கைலாயம் அனுப்பிட படையெடு
அச்சத்தைக் காற்றில் கரைத்திடு - நீ
அடுத்தவர் உயர்ந்திட கரம்கொடு

சாத்திரம் சடங்கை உடைத்திடு - நீ
சாதிக்கப் பிறந்தவன் உணர்ந்திடு
பகலிலும் பனியிலும் உழைத்திடு - நீ
பகட்டான வாழ்வை ஒதுக்கிடு

மண்ணில் தொன்றும் மாசுகளை - உன்
மணிக்கரம் கொண்டு துடைத்திடு
கோள்களும் உன்னை பணியும்படி - நீ
கோடியில் ஒன்றெனப் பேரெடு

வாழ்வில் பிறருக்கு பயன்படு - உனை
வளைத்திடும் துயர்களை புதைத்திடு
இளமையை சரியாய் செதுக்கிடு - நீ
இமயத்தில் கொடிநட புறப்படு.

எழுதியவர் : பாவலர். பாஸ்கரன் (26-Mar-17, 2:17 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 57

மேலே