மெட்டுப் பிறப்புகள்
உதடுகள்
உதற முடியாமல்
ஒட்டிக் கொண்டவை
படப்பாடல்கள்!
சங்கீத சபாக்கள்
இங்கில்லை இடமென்று
எழுதி வைத்த பிறகு
பாட்டும் பாமரனும்
எங்கே போகமுடியும்
படக் கொட்டகை தவிர?
கிராமியக்
காற்றிலிருந்து இளையராஜா
கிள்ளியெடுக்கும்
தெம்மாங்கு போதும்..
கிழடு தட்டிய
வித்துவான்களின்
கீர்த்தனை விக்கல்களை
எவன் கேட்பான்?
செம்மங்குடிகள் பாட்டில்
இசையிருக்கிறது, நம்
கொல்லங்குடிகள் பாட்டில்
இதயம் அல்லவோ இருக்கிறது?
கற்றவனுக்குக்
கம்பன் அமுதக் கிண்ணம்.
கல்லாதவனுக்கோ
கண்ணதாசனும்
பட்டுக்கோட்டையும்
கஞ்சிக் கலயம்.
ஆயினும்
இந்த
மெட்டுப் பிறப்புகள் பல
விட்டில் சிறகுகளே.
கொசுத்தோப்பில்
இரண்டொரு குயில்கள்
இருப்பதுபோல்
இலக்கிய ஒளி
இருப்பதும் உண்டு.
கவிதை
தடுமாறும் போது சில சமயம்
தடம்மாறிப்
படத்துக்குப் போய்விடும்.
குழந்தைகளி
விழிகளுக்காக விரதம் ருந்த
நட்சத்திரம்
குழம்பிய குட்டையில்
விழுவதில்லையா!
சில மொழிகளில்
கவிதைக்குத் திரைப்படம்
என்பது
கட்டிய மனைவி
நம்
தமிழில்....
திரைப்படத்திற்குக்
கவிதை
'தீண்டேல் திருநீலகண்டம்'
சொற்களைத்
தின்னும் மெட்டுக்கு
ஆரோக்கியத்தின்
அடையாளமாய்க்
கவிதைப் பசி வராதா?
மருத்துவரின்
கருவிகளாலேயே காயமா?
பிணம் எடுப்பதற்குப்
பெயர் பிரசவமா?
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
