முதல் காதல் கதை
முதல் காதல் கதை-
முத்தங்களை
மொத்த குத்தகைக்கு எடுத்த கதை
வறண்ட என் பாலையில்
ரோஜாச்செடிகள் பதியம் போட்ட நாட்கள்
அது -
பகலுக்கும் இரவுக்கும்
பனிப்போர் நடந்த காலம்
அழகி அவளை
காதல் செய்ய ஆரம்பித்து
நானும் அழகன் ஆனேன்.
மாலைப் பொழுதுகள்
எனக்கு மயக்கம் தரும்
மலர்கள் என்னோடு
மௌனித்து பேச வரும்
எங்கள் சந்திப்புகள் தொடர்ந்த போது கருவேலங்காடு
கவின்மிகு பூங்காவாய் மாறியது
மலை அருவியில் குளித்த நான்
முதன்முதல் மங்கையின் அருவிச்சாரலில்
மலைத்துப் போனேன் -
மயங்கித்தான் போனேன்
பருவங்களின் ரகசிய யுத்தத்தில்
பகலுணவும் ராவுணவும்
பாழாய்ப் போனது -
அது-
படகுத் துறைக்கும்
படகுக்கும் நடந்த மல்யுத்தம்
அலையும் கரையும்
சேர்ந்து நடத்திய வில்யுத்தம்
இங்கு தோற்றவர் ஜெயிப்பார்
ஜெயிப்பவர் தோற்பார் .
மாலை வரும் நேரம்
மந்த மாருதம் சேர்ந்து வரும்
மங்கையின் வருகையை
எனக்கு கட்டியம் கூறும் .
அது ஒரு வசந்த காலம் -
அன்பும் அழகும்
ஆட்சி செய்த காலம்
அதுபோல் ஒரு காலம்
வருமோ எக்காலம் !..............