ஈழம் ஒரு அரசியல் கண்ணோட்டம் பகுதி 3

போர்குற்றம் என்பது ஒரு அரசியல் சொல்லாடல் என்பதால்தான் இந்த கண்ணோட்டம் இந்த பெயர் பெற்றது.
ஆம். போர்குற்றம் என்பது நாடுகள், அரசாளுமைக்கான வசதிக்காக ஏற்படுத்திய ஒரு சொல்லாடல்தான். அதாவது போர் என்று வரும்போது, சமர்=தர்மம் (போர்முறை) எனும் ஒன்று இருக்க வேண்டும் என்பது இதிகாச காலம் தொட்டே இருந்து வரும் ஒரு மனித குல வழக்கம்.
மனித குலம் தழைக்க வேண்டும் எனும் நோக்குடன், அழிவுப் பாதையில் செல்லும் சிந்தனைகளை வரைமுறைக்குள் கொண்டுவரும் ஒரு முயற்சிதான் இந்த சொல்லாடல். போரே ஒரு குற்றம் என்று சொல்லும் ஒரு நேர்மை இல்லாத அரசுகள் (ஆளுமை சிந்தனைகள்) போரில் செய்யப்படும் பல நிகழ்வுகளை தம் வசதிக்கேற்றபடி "போர்குற்றம்" --ஆக வகைப்படுத்தி உள்ளன. அதற்கு அடிப்படையாக மனித உரிமை எனும் கோட்பாடுகளை கொண்டு போரின் விதி முறைகளை வரையறுத்து செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
குற்றம் சாட்டுபவர்கள் இருந்தால் தான் இதை செயல்படுத்த முடியும். இல்லையெனில் போரில் நிகழும் எந்த ஒரு செயலும் குற்றம் என்று கருதப்படமாட்டாது. ஆம். ஈராக்கில், வியட்நாமில், போஸ்னியாவில், லெபனானில், ஆப்கானிஸ்தானில் நடந்த எந்த ஒரு நிகழ்வுமே போர்குற்றமாக அலசப்படவேயில்லை என்பது வேறு சங்கதி. அதை பற்றி இங்கே குறிப்பிட்டால், நம் பயணம் திசை மாறிவிடும் என்பதை குறிப்பிட்டு இத்தோடு அதை நிறுத்திக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம்.
இங்கு யாரையும் முகத்திரை கிழிக்கும் அரசியல் நோக்கம் கொண்டு வரவில்லை. ஆயினும், ஈழத்திற்கான ஒரு அரசியல் பார்வை அவசியமானதால் அதன் பாதையில் பயணிக்கவே விருப்பம்.
போர்குற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மனித குழுமத்திற்காக, ஒடுக்கிய அரசின் அட்டூழியங்களை பட்டியலிடும் ஒரு செயல்பாடுதான் இந்த சொல்லாடல். அதாவது போரை புறந்தள்ளிவிட்டு, போரை மறைமுகமாக நியாயப்படுத்திவிட்டு, (அதாவது ஒடுக்கிய அரசின் செயல்பாடுகள் என்பவை காலத்தின் கட்டாயம் என்பதை உள்குத்தாக ஒப்புக்கொண்டு), அந்த ஒடுக்கிய அரசின் நோக்கம் நிறைவேறிய பிறகு கூக்குரலிடும் ஒரு நாடகம் தான் இந்த போர்குற்றம் எனும் சொல்லாடல். இதை ஏன் இங்கே குறிப்பிடுவது அவசியம் என்றால், போர் நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த, அதே கூட்டம்தான் இன்று போர்க்குற்றம் எனும் ஒப்பாரியையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதை அடிக்கோடிட்டு காட்டவேதான் இந்த சங்கதியை இங்கே அழுத்தமாக பதிவு செய்யவேண்டிய அவசியமாகிறது.
அமெரிககா, இந்தியா, தமிழ்நாடு, ஐ.நா எனும் அனைத்து இடங்களுக்கும் மற்றும் இங்கெல்லாம் ஈழத்தை ஒரு வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே பயன்படுத்தும் அனைத்து வியாபார அரசியல்வாதி பெருமக்களுக்கும், அதிகார செயல்பாட்டில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இது பொருந்தும்.
சரி ஏன் இந்த இடத்தில் இது பற்றிய பேச்சு?
ஏனெனில், போர் நடக்கும்போது அதை தடுத்து நிறுத்தும் சக்தியோ, திறனோ இந்த மேலே குறிப்பிட்ட எந்த ஒரு நபருக்குமோ அல்லது எந்த ஒரு அமைப்புக்குமோ அல்லது அரசுக்குமோ இல்லாது இருந்திருக்குமா என்ன? அப்படி இருக்க அப்போதெல்லாம் சிறு முனகல் கூட எழுப்பாத இந்த அக்கறை நெஞ்சங்கள் இப்போது இதை ஒப்பாரியாக வைப்பது என்பதன் நோக்கமே அரசியல் என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த இடத்தில் இது பற்றிய ஒரு பதிவு.
சரி போர்குற்றம் எனும் குரலுக்கு வருவோம்.
போர்குற்றம் எனும் குற்றச்சாட்டு வலுப்பட வேண்டும் என்றால், முதலில் போரை நியாயப்படுத்தியதை திருத்த வேண்டும். ஆம். தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்தியதால்தான் இந்த போர் அவசியாமானதாகி அதை நிகழ்த்தவும் நேர்ந்தது.
தமிழ் போராளிகள் தீவிரவாதிகளில்லை என்றாகிவிட்டால், அந்த போரே ஒரு குற்றமாகிவிடும். அதாவது வாழ்வுரிமை மறுக்கப்படும் ஒரு சமுதாயத்திற்கு எதிராக அரசால் ஏவப்பட்ட அடக்குமுறைகளும்,. வன்முறை செயல்களும் குற்றம் என்று நிரூபணமாகிவிடும். அதற்கு இந்த உலகில் எந்த ஒரு நெஞ்சத்திற்கும் துணிவில்லை.
ஆம். தமிழ்ப்போராளிகளை தீவிரவாதிகள் இல்லை என்று முத்திரை குத்த எந்த ஒரு சிந்தனைக்கும் துணிவில்லை. அப்படி செய்து விட்டால், தத்தமது அரசியல் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடுமோ எனும் அச்சம் நெஞ்சத்தில் உறைந்து கிடப்பதுதான் இதற்கு காரணம். அதாவது தமது இயக்கங்களையும் தீவிரவாத சாயலில் பார்க்கப்படுவது தொடங்கிவிடுமோ எனும் அச்சம்தான் அது,.
எனவே போர்க்குற்றம் என்னும் கூக்குரல்களில் தமிழர்களின் நலவாழ்வு அடங்கியிருப்பதாக கருதி எந்த ஒரு தருணத்திலும் ஏமாறும் ஒரு அப்பாவித்தனம் வேண்டாம் என்பதே இங்கே வெளிப்படையான கோரிக்கை.
இந்த கூக்குரல்கள் எல்லாம் அரசியல் நோக்கம் கொண்ட வியாபார செயல்களே.
இப்படி எழுதுவதால் யாரையும் பழி போடுவதாக எந்த ஒரு அவசர முடிவுக்கும் வரவேண்டாம். ஒரு அரசியல் கண்ணோட்டம் என்பதே அரசியல் ரீதியாக தீர்வுகாண விரும்பும் ஒரு செயல்தான். ஈழம் வேண்டுவதில் அரசியல் விளையாடுகிறது என்பதால் அரசியலே ஒரு சாக்கடை என்றோ, அரசியல் என்றாலே வெறுக்கத் தக்க செயல் என்றோ, அரசியல் என்பது நேர்மையற்ற செயல்பாடு என்றோ கருதும் எண்ணம் வேண்டாம்.
சரியான கோணத்தில் பார்க்கும் போது மட்டுமே விரைவில் தீர்வு காண முடியும் எனும் எண்ணத்தில் இந்த கருத்துப் பதிவு.
ஏனெனில் ஈழம் என்பது தனி அரசியல் அமைப்புக்கான ஒரு கோரிக்கைதான். அதை எளிதில் அடைய முடியாததால்தான் இந்த நீண்ட நெடிய போராட்டமே.
முதலில் அமைதிப் போராட்டம் கோரிக்கைகளாக. பிறகு ஆயுதப் போராட்டம் அழுத்தமான மன உறுதியுடன். இப்போது அரசியல் போராட்டம் "போர்குற்றம்" "இனப்படுகொலை" எனும் சொல்லாடல்கள் மூலமாக. இத்தனை விதமான போராட்டங்களை நசுக்கும், ஒடுக்கும், இந்த இலங்கை அரசு தமிழர்களின் வாழ்வுரிமையை அங்கீரித்து விட்டால் அந்த மண்ணில் மனிதம் தழைத்துவிடும். செய்யும் செலவுகளும் ஆக்கப் பூர்வமான செயல்களாகி விடும். அதை உணர்த்தவே இந்த முயற்சி.
சரி இதெல்லாம் அந்த அரசுக்கு புரியாமல் இருக்குமா என்ன? உலகின் இத்தனை கூக்குரல்களுக்கும் செவிசாய்க்காத அரசு ஏன், எப்படி இத்தனை மெத்தனமாக இருக்கிறது?
பிரச்சினையின் ஆழத்திற்கு செல்லவேண்டியது அவசியமாகிறது.
இனிதான் முக்கியமான சங்கதிக்குள் நுழைகிறோம்.
கவனமான புரிதல் வேண்டும் இனி வரும் கருத்துகளில். ஏனெனில் இந்த கருத்துகள் மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை..
ஏற்கனவே பார்த்தோம். இலங்கை தனது கவலையை இந்தியாவிடம் ராஜீவ் ஒப்பந்தம் மூலம் ஒப்படைத்து விட்டு, இன்ப சுற்றுலா சென்று விட்டது என்பதை. அப்படியானால் இன்னும் இலங்கை அந்த இன்பச்சுற்றுலாவில் இருந்து திரும்ப வரவேயில்லையா? ஆம் என்றுதான் சற்றேறக்குறைய சொல்லத் தோன்றுகிறது.
ஏனெனில் இன்னும் இலங்கையில் சங்கதிகளை இழைவு செய்வது (இன்ஃப்லூயன்ஸ்) இந்தியாவும், இந்தியாவின் அரசியலும்தான்.
எப்படி ? சற்றே விரிவாக பார்ப்போம்.
அதற்குத்தான் ராஜீவ் ஒப்பந்த காலக்கட்டத்தை ஒரு ஒப்பீடு செய்தோம். இனி மேலே பார்ப்போம்.
இந்தியாவில் வழங்கும் இதிகாசம் ராமாயணத்தில் இலங்கை அரசன் ராவணன் என்பவனை அரக்கன் என்றும், கொடுங்கோலன் என்றும், அவனை ராமன் போரில் வெற்றி கொண்டு திரும்பினான் என்பது சாராம்சம். அந்த ராமாயணத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்து சக்திகள் இந்தியாவில் தலை தூக்கத் தொடங்கி, ராமர் கோவில் கட்ட புறப்பட்டன. இது இந்த காங்கிரஸ் (இ) எனும் அரசியல் கட்சிக்கு சகிக்க முடியவில்லை.
இலங்கையின் மெத்தனத்திற்கு காங்கிரஸ் (இ) கொடுக்கும் அழுத்தமான,மறைமுகமான இல்லை... இல்லை.... வெளிப்படையான ஆதரவே காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு சரியான பிடிமானம் வேண்டுமெனில் சரியான முறையில் அது தூண்டப்படவேண்டும். அதே நேரத்தில், இந்தியாவும் சரியான முறையில் தூபம் இடப்படவேண்டும்.
இங்குதான் முடிச்சு விழுகிறது.
"உன்னை, உனது குலத்தை, ராவணனை அரக்கனாக சித்தரிக்கும் இந்த இந்தியாவின் பாரம்பரியத்தை பழி வாங்கிக் கொள்ள இதுவே சரியான தருணம். செய்து கொள் இதை சாக்காக வைத்து" என்பது மறைந்து கிடக்கும் அரசியல். மேலும், "இந்து மத அரசியலுக்கு காயம் ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்தால்தான் உண்மையான அரசியல் வெற்றி என்பதை புரிந்து கொள் ஏ காங்கிரஸ் கட்சியே", எனும் இலங்கையின் தூபமும் இங்கே மிக கச்சிதமான செயல்களை இணைப்பு நெகிழியாக செய்து கொண்டிருக்கின்றன.
ஏன் இந்த வன்மம்?
சொன்னீர்களே அயல் தேசத்தவள் என்று. அந்த மனக்காயத்திற்கு எங்கிருந்து மருந்திடுவது? மேலும் இத்தனை ஆண்டுகளாக அரசியல் பதவிகளுக்கான சந்நியாச வாழ்வு வாழ வைத்திருக்கிறீர்களே அதற்கு ஈடு எப்படி கட்டுவது? தியாகங்கள் என்ன தர்ம சேவையா அரசியலில். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை உள்ளது. அதுவும் அரசியல் என்பது சில்லறை அரசியல் இல்லை இது. உண்மையான, வடிகட்டிய, கலப்படமில்லாத அரசியல். அரசாளுமை கொண்ட அரசியல். அதனால்தான் இன்னும் தமிழக அரசியல் கட்சிகளுடன் தொடர் உறவு கூட்டமைப்பாக. அரசியலை வியாபாரமாக வெளிப்படையாக ஒப்புக்கொண்ட, சுயநலமிக்க ஒரு பழுத்த சிந்தனைவாதியுடன். அதாவது உறவாடிக் கெடுப்பது என்பதன் இலக்கணத்திற்கு பிசகு இல்லாமல். ஏனெனில் ராஜீவ் மரணத்திற்கு தமிழ்ப்போராளிகள் எனும் பெயரில் பயன்படுத்தப்பட்டவர்கள் காங்கிரஸ் (இ) --இன் உள்ளிருப்பு குள்ளநரி கூட்டத்தின் சதி வலையில் சிக்கிய அப்பாவிகள் என்றுதான் முன்னமே தெரிந்து விட்டதே.
(சற்றே உயரமேடை சிந்தனை... செரிமானம் செய்வது சற்று கடினம்தான்.
தொடங்கும்போது (ராஜீவ் ஒப்பந்தம் வரும்போது) இந்த நோக்கம் என்பது இருக்கவில்லை. ராஜீவ் அரசியலுக்கு புதிய தலைவர் என்பதால் அத்தனை தூரம் பக்குவப் பட்டிருக்கவில்லை. நிர்வாக அறிவுரைகளின்படியே அவரின் பார்வைகளும் புரிதலும் அமைந்தன. எனவேதான ராஜீவ் ஒப்பந்தத்தில் தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராஜீவின் வாழ்வு அரசியலுக்காக பலிவாங்கப்பட்ட பிறகு வந்த நிகழ் தொடர்களால் உருவான வரலாற்று சான்றான அரசியல் சிந்தனைதான் மேலே சொல்லப்பட்ட ஒன்று. இங்கு சற்றே நெருடலாக மட்டுமே கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. ஏனெனில் இன்னும் உலக அரசியலை, தமிழக அரசியலை கண்ணோட்டம் விடும் பணி நிலுவையில் உள்ளது. அதனால் இந்திய அரசியலுக்குள் இதற்கு மேல் செல்லாமல் நிறுத்திக் கொள்வோம்)
எதற்காக இந்த ஆழமான கண்ணோட்டம்?
ஏனெனில், இனப்படுகொலை என்பது ரணமாக அனுபவித்த மனக்காயங்களால் தூண்டப்பட்டு, அதீதமாக கீறப்பட்ட வெறுப்புணர்வால் மட்டுமே வரும் வன்ம உணர்ச்சியாகும்.
அவ்வாறு எழும் வன்ம உணர்ச்சிக்கு மட்டுமே உக்கிரம் அடையும் தன்மை உள்ளது. அந்த உக்கிர வன்ம உணர்ச்சியில் மட்டுமே மனிதம் மறக்கடிக்கப் பட முடியும்.
இந்த வன்ம உணர்ச்சிக்கு ஆழமான, திரும்ப திரும்ப காயப்படும் மனம் வேண்டும். அது இல்லையெனில் ஏதேனும் ஒரு இடத்தில் மனிதம் எட்டிப் பார்த்து இரக்கம், கருணை வெளிப்படும்.
அதாவது தொடர்காயம் கொள்ளும் மனதால் மட்டுமே வன்மம் வளர்க்க முடியும். மற்றும் இந்த வன்மம் இருந்தால் மட்டுமே வெறுப்பும் அதன் உக்கிரமமான இனப்படுகொலையும் நடக்க இயலும்.
விதை என்பது இருந்தால்தான் செடியும், உரம் என்று இருந்தால்தான் உறுதியான மரமும் விளைய முடியும். இது உலகின் யதார்த்த தத்துவம்.
இனப்படுகொலை செய்யும் சிந்தனைக்கும் அதை ஆதரிக்கும் சிந்தனைக்கும் இதே ஒருமித்த உணர்வு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆக முடியும். இதில் இரு இடத்திலும், அதாவது இலங்கை அரசின் சிந்தனை மற்றும் இந்திய அரசியல் கட்சியின் ஒரு தலைமையின் சிந்தனை, ஒருமித்ததாக வன்மம் வளர்க்கப்படும்போது மட்டுமே இனப்படுகொலைக்கான கூட்டு முயற்சிகள் வெற்றியடைய முடியும். இல்லையெனில் பிசிறு தட்டி நீர்த்து போகும். கூட்டு உறவு என்பது ஒருமித்த சூழலில் உருவாவது.. இனப்படுகொலை என்பது சிறுமையான, சில்லறை சங்கதி அல்ல.
எனவேதான் இந்த சிந்தனையை உயர்ந்த மேடை சிந்தனை என்று குறிப்பிட வேண்டிய அவசியமானது.
இல்லையெனில், இத்தனை கொடூர நிகழ் காட்சிகள் ஆதாரமாக காட்டி, இரக்கம் யாசகம் கேட்கும் உலக குரல்களுக்கு சற்றும் அசைந்து கொடுக்காத மனமும், இன்னும் பிடிவாதமாக இலங்கையை கண்டிக்காத போக்கும் எப்படி செயலில் துணிவுடன் வரும் இந்திய அரசுக்கு?
இதுவெளியுறவுக் கொள்கையில் உள்ள தடுமாற்றம் இல்லை. அழுத்தமான வன்ம எண்ணம்.
ஏதொ ஒரு மூலையில், அமெரிக்காவில், அதுவும் அமெரிக்க குடியுரிமை கொண்ட நபர்கள் (இந்தியர்கள் கூட இல்லை அவர்கள்) துப்பாக்கி சூட்டிற்கு பலியானதற்கு துடித்து போய், அவசரமாக ஆட்சேபம் தெரிவித்து, இனிமேல் அவ்வாறு நடக்காத படி உறுதிபட செய்ய உடனடியாக இந்த பிரதமரால் முடியும் என்றால், போரின் போது, போருக்குப்பிறகு, மீன்பிடிக்கும் கடல் பரப்பில் என தொடர்ந்து கொல்லப்பட்ட, கொல்லப்படும் தமிழர்கள் மட்டும் இவரின் கண்ணில், சிந்தனையில் படமறுப்பது ஏனோ?
இன்னும் நிகழ்கால செயல்பாடுகளுக்குள் போக அதிக தூரம் பயணப்படவேண்டி உள்ளது.
தொடர்ந்து செல்லலாம்........
.