முழுவுலக முற்றுகை- கே.எஸ்.கலை

எளிதாக
அழகாக, மலிவாக
உடன் வாழும்
விடம் !
சூட்டில் இளகி,
குளிரில் இறுகி-
அமைதியாய் அழிக்கும்
பிறவி !
சாகாத
வரம்வாங்கி,
சாகடிக்க தவமிருக்கும்
துறவி !
மண்வாழ்,
கடல்வாழ், வனவாழ்
அவதியுறும் நிலை-
வரவால் !
மா, வாழை
பனை, கமுகாய்-
அரங்குகளில், மேடைகளில்
இடம் !
விண்ணில்,
விளையாட்டில்,
விவசாயத்தில்-
எங்கேயும் எப்போதும் !
மட்காத புரட்சி !
முடியாத மீள் சுழற்சி !
ஊமைத் தாக்குதலாய்
நோயுடன் அழற்சி !
பழகிப் போனதால்
பாழாய்ப் போகும் வரை
தொடரும் முடிவிலி
பந்தம் !
----------இது
வேதியல்
விஷங்களை வெளித் தள்ளி-
வெகுளியாய் வாழும்
நெகிழி !
----------
(நெகிழி – பிளாஸ்டிக்)