பாடல்

பிறந்த குழந்தையும்
அறிந்த மொழி
தாயின் முதல்
தாலாட்டுப் பாடல் கேட்டு
தன்னிலை மறந்து
கண் அயர்ந்த வேளை

ஆராரோ ஆரிரோ ....விம்மி
அழும் குழந்தையை
ஆற்றுப் படுத்தும்
அரு மருந்து
ஆண்டாண்டுக் காலமாய்
அன்னை தரும் வாழ்வியல்
அர்த்தம் நிறைந்த
சிந்தனைக் கவள மருந்து ..

உழைத்து தோய்ந்த
உள்ளங்களுக்கு
ஊக்க மருந்தாய் -
உழவு செய்யும் பாட்டாளி
செழித்து வளர பயிர்க்கு இடும்
ஊட்டமருந்தாய்

பாவை விழிப் பார்த்து
கவிபாடும் காளையர்க்கு
காதல் சதிராட்டம் போடும்
சந்தம் சேரும் பாடலாகும்

சமநிலை வாழ்வுக் கிட்டா
சாமான்ய ஏழைக்கும்
சாதிய வன்மம் தீண்டும்
சமத்துவ எண்ணம் கொண்ட
சமநிலை மனிதனுக்கும்
விடுதலை முழக்கப் பாடலாகும்

வேங்கையாய் களம் புக
வேண்டி நிற்கும்
தேசப் பிள்ளைகள்
பகைவன் பாசறைப் புக
பாயும் புலியாய்-வீர
வேட்கைத் தரும்
பாடல் ஒலியாய்

வெற்றிக் கொள்ளும் வீரர்
கொற்ற வஞ்சிப் பாடலாய்
கொட்ட இசை
கொண்டாட்டம் கொள்வாரே
கொற்றம் கண்ட களிப்பிலே

தோல்விக் கண்டு வீழ்ந்தாலும் -புதுத்
தோற்றம் கொண்டு எழுவாரே
வேள்விக் கொண்ட நெஞ்சத்தே
வேண்ட விடுதலை வெல்வாரே
மன உறுதி தரும் பாடலாலே

மரணம் எய்திட்ட போதும்
மகிழ்வுடன் செல்வாரே
மா நிலம் காக்க
மாண்ட பெருமையோடு
மக்கள் போற்றி பாடுவரே
மாமனிதன் நீயே என்று ..............

எழுதியவர் : தமிழ்முகிலன் (6-Jun-13, 8:59 am)
பார்வை : 96

மேலே